Tuesday, September 13, 2005

சத்யா !!

இரண்டு நாளைக்கு முன்பு புதிய மெயில் வந்திருக்கிறதா என்பதற்காக யாகூவை திறந்த போது தான் அந்த அதிர்ச்சியான செய்தி எனக்காக காத்திருந்தது. போன வாரம் என் நண்பன் சத்யா இறந்துவிட்டான் என்று இரண்டு வரி மெயில்.. உடைந்து போய் அப்படியே திரையை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். என்ன செய்வதென்று தெரியவில்லை. அழுவதற்கும் கூட தெரியவில்லை.

நான் எனது கல்லூரியில் சேர்வதற்கு முன்னாலேயே என் நண்பன் ஒருவன் மூலம் எனக்குத்தெரிந்த ஒரே பெயர் சத்யா. இரண்டு வருடன் ஒரே வீட்டில் நாங்கள் தங்கியிருந்தோம். அவன் மறைந்துவிட்டான் என்பதற்காக சொல்லும் புகழ் மொழியல்ல.... அவனைப்போல் அருமையான மனிதனை பார்ப்பது கடினம். எல்லோரிடமும் இனிமையாகப்பழகுவான். கல்லூரியில் எல்லா துறையியிலும் அவனுக்கு நண்பர்கள் இருந்தார்கள். யாரும் கேட்காமலேயே உதவி செய்வான். அவனிடமிருந்த அந்த குணங்கள் தான் அவனை கல்லூரி மாணவர் தலைவன் தேர்தலில் அவனை வெற்றி பெற வைத்தது.

கல்லூரி முடித்தவுடன் நேராக குவைத்திற்கு சென்றான் என்று மட்டும் கேள்விப்பட்டேன். எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்தோம். அவ்வப்போது நண்பர்கள் மூலம் அவனைப்பற்றிய செய்திகளை பறிமாரிக்கொள்வதோடு சரி.. மூன்று நான்கு வருடங்களுக்கு முன்னால், ஒருநாள் சத்யாவிற்கு குவைத்தில் உள்ள மருத்துவர் ஒருவர் தவறான மருந்தை கொடுத்ததால் அவன் உயிருக்கே ஆபத்தான நிலையில் இந்தியாவிற்கு திரும்பிவிட்டான் என்று கேள்விப்பட்டேன். கடுமையான போரட்டத்திற்குப்பின்பு உடல்நிலை சகஜ நிலைக்கு திரும்பி வந்தவுடன் சிங்கப்பூரில் வேலை கிடைத்து அங்கு ஒரு சில வருடம் வேலை செய்தான். திரும்பவும் உடல் நிலை சரியில்லாமல் போகவும், இந்தியா திரும்பிவிட்டான்.

அதற்குப்பிறகு போன வருடம் அவனுடைய கைத்தொலைபேசி எண் கிடைத்து அவனை தொடர்பு கொண்ட போது அவ்வளவு உற்சாகமாக வாழ்க்கையில் அவ்வளவு நம்பிக்கையாக பேசினான். ஒரு உடை ஏற்றுமதி தொழில் அவனது நண்பனுடன் சேர்ந்து செய்ய இருப்பதாகவும் அதற்கு ஏதாவது நான் இங்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்டான். அதுவிஷயமாக நாங்கள் பல மெயில்களைப்பறிமாறிக்கொண்டோம்.

போனவருடம் அவனிடமிடுந்து ஒரு மெயில் வந்திருந்தது. அதில் அவன் சினிமாவில் உதவி டைரக்டராக முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும், அதற்குப்பிறகு நடிகர் பொன்னம்பலம் தயாரித்து இயக்கும் ஒரு படத்திற்கு உதவி இயக்குனராக பணி புரிந்து கொண்டிருப்பதாகவும், அவனின் வாழ்க்கை லட்சியமான சினிமா இயக்குனராவதை சீக்கிரம் அடைந்து விடுவேன் என்று ஒரு நம்பிக்கையான ஒரு மெயில். அதற்குப்பிறகு எந்தவிதமான தொடர்பும் இல்லை.

இன்று கடைசியாக வந்த செய்தியின் படி இது ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்ததால் ஏற்பட்டதாம்.

மரணம் என்பது இயற்கையின் நியதியென்றாலும் இது போன்ற அகால மரணங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் தாங்கிக்கொள்ள் முடியாதவையாகவிருக்கின்றன.. எண்ணிப்பார்க்கும்போது சத்யா இறந்த செய்தி எனக்கு தெரியாமலேயே இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. எங்கோ எப்படியோ வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று என் எண்ணங்களிலாவது வாழ்ந்து கொண்டிருந்திருப்பான்.

வாழ்க்கையில் பல லட்சியங்களுடன் முன்னேறத்துடித்துக்கொண்டிருந்த ஒரு இளைஞனின் வாழ்க்கையை ஒரு மருத்துவர் கொடுத்த தவறான மருந்து சீரழித்து அதனால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கான மிகுந்த போராட்டத்திற்கிடையில் இறந்து போனதை பார்க்கும்போது வாழ்க்கையின் மீது கோபம் தான் வருகிறது.

இந்நேரத்தில் சுவாமி சுகபோதானந்தா சொன்னது ஞாபகம் வருகிறது.. 'SUCH IS THE WAY OF LIFE'

15 Comments:

Anonymous Anonymous said...

உங்கள் நண்பரின் ஆன்மா சாந்தியடைய பிராத்தனைகள்...

September 13, 2005 2:50 pm  
Blogger enRenRum-anbudan.BALA said...

My deepest condolences !!!

September 13, 2005 3:01 pm  
Anonymous Anonymous said...

My deepest condolences Suresh!

September 13, 2005 3:09 pm  
Blogger Ramya Nageswaran said...

படிக்கும் பொழுது வருத்தமாக இருந்தது சுரேஷ்.

September 13, 2005 3:33 pm  
Anonymous Anonymous said...

time is the only cure for all this. Hope their family will soon recover from this untolerable sad news.

--
jagan

September 13, 2005 3:33 pm  
Blogger வீ. எம் said...

படிப்பதற்கே வேதனையாக இருந்தது..
அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்..

இப்படியும் மருத்துவர்கள் .. என்னவென்று சொல்வது..

September 13, 2005 4:27 pm  
Blogger கலை said...

My deepest condolences.

September 13, 2005 7:04 pm  
Blogger துளசி கோபால் said...

ஆழ்ந்த அனுதாபங்கள் சுரேஷ்.

சத்யாவின் ஆன்மாவுக்கு சாந்தி கிடைக்கட்டும்.

September 13, 2005 9:30 pm  
Blogger ஜோசப் இருதயராஜ் said...

என் ஆழ்ந்த அநுதாபங்கள்.....

இந்த இடத்தில் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்..

இந்தியா, இலங்கை, பாக்கிஸ்தான், பங்களாதேஷ்,....இப்படி எல்லா வெளிநாட்டவரும், இந்த மத்தியகழக்கு நாடுகளில் வைத்தியத்திற்கு நாடுவது... "போலி கிளினிக்"
polyclinic.

பெரிய நவீன தனியார் வைத்திய சாலைகள் உள்ளன ஆனால் அவற்றுக்கெல்லாம் சாதாரணமாக நம்மைபோன்றவாகள்போக முடியாது.., காரணம் அதன் கட்டணம் செலவு என்பவை எம்மால் ஈடு கொடுக்க முடியாது. அரசாங்க வைத்திய சாலைகளுக்கு நம்மால் போக முடியாது... (அதெல்லாம் இங்கு வேண்டாம்.பிறகு ஆராய்ச்சி கட்டுரை எழுத வேண்டி வரும்).

இதையெல்லாம் மத்திய கிழக்கு நாடுகளில் வேலைசெய்யும் யாரை கேட்டாலும் சொல்வார்கள்.

இப்படியிருக்க இங்கு "நோய்க்கு வைத்தியம்" என்பது ரொம்பவும் ரிஸ்க்!ஏனெனில் இந்த நாடுகளில் உள்ள கிளினிக்குகள் என்ற பெயரிலான பெரும்பாலான வைத்தியசாலைகளில் பணிபுரியும் டாக்கடர்கள்,மத்திய கிழக்கின் எகிப்து நாட்டை சேர்ந்தவர்கள்... அவர்கள் எல்லாரும் நன்றாக வைத்தியதுறையில் அறிவும் அநுபவம் பெற்றவர்களா?... என்றால் அது கேள்விக்குறி தான்...

ஏன் இந்தியாவிலிருந்து வந்து வைத்தியம் பார்க்கும் வைத்தியர்களில் பலநூறு பேர் இப்படிதான் (போலி டாக்டர்கள்).
ஏனென்றால் இங்கு வைத்தியம் என்பது சேவை கிடையாது, பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட ஒரு வியாபாரம் மட்டுமே.

இது போன்று வெளியில் தெரியாத பல நூறு தவறான அல்லது தப்பான சிகிச்சை மரணங்கள்... இங்கு ரொம்ப ஜோராகவே நடக்கின்றன இங்கு.

இதற்கு விதிவிலக்குகளான வைத்திய சாலைகள் இருக்கிறன்றன, வைத்தியர்கள் இருக்கிறார்கள், ஆனால் அவையெல்லாம் பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே செல்லக்கூடியதானவை...

பிழைப்பிற்காக... இங்கு வந்து வாழ்கையை ஓட்டும் லட்சக்கணக்காண, மக்கள் இதை நாடுவது என்பது குதிரைகொம்புதான்.

ஆக குதிரைக்கு கொம்பு முளைக்கும் வரை இந்த மாதிரியான வைத்தியர்களிடமும், போலி கிளினிக்குகளிடமும்,தங்களின் உயிரை பணயம் வைக்க வேண்டிதானிருக்கிறது.

பெயரை பாருங்கள் " போலி கிளினிக்"
நன்றி

September 14, 2005 8:49 am  
Blogger Suresh said...

சண்முகி, பாலா, dubukku, ரம்யா, ஜகன், வீஎம், கலை, சத்யா, துளசி அக்கா, ஜோசப்

உங்கள் அனைவருடைய அனுதாபத்துக்கும் நன்றி.

September 14, 2005 2:38 pm  
Blogger Ganesh Gopalasubramanian said...

எனது அனுதாபங்கள் சுரேஷ்

September 15, 2005 5:45 am  
Anonymous Anonymous said...

I'm sorry about your friend, buddy!!

September 17, 2005 12:01 am  
Blogger வசந்தன்(Vasanthan) said...

உருக்கமான பதிவு.
ஆழ்ந்த அனுதாபங்கள்.

September 17, 2005 2:53 am  
Blogger Suresh said...

நன்றி கணேஷ், சரவ், வசந்தன்

September 17, 2005 8:06 pm  
Blogger Suresh said...

உங்கள் அனுதாபத்துக்கு நன்றி ராஜ்.

September 30, 2005 7:57 am  

Post a Comment

<< Home