தனி மனித சுதந்திரம்
தனி மனித சுதந்திரத்துக்கு மதிப்பு கொடுத்தல் சிறுவயது முதலே ஆரம்பித்து விடுகிறது. குழந்தைகள் அவர்கள் விரும்பியவற்றை தெர்ந்தெடுக்க அனுமதிப்பது, வீட்டில் அவர்களுக்கென்று தனி அறை கொடுத்து அவர்களின் தனிமையையும் தங்களுடைய தனிமைத்தேவையையும் மதிப்பது, குழந்தைகளை விரும்பிய படிப்பு படிக்க விடுவது, அவர்கள் ஒரு வயதுக்கு, தங்களை தாங்களே பார்த்துக்கொள்ளக்கூடிய வயதுக்கு வந்தபிறகு அவர்களின் பொருளாதாரத்தேவைகளை அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டிய ஒரு தளத்தை ஏற்படுத்துவது என்று எல்லா இடங்களிலும் தனிமனித சுதந்திரத்தை பார்க்கலாம்.
அதேபோல் பொது இடங்களில் மக்கள் கடை பிடிக்கும் ஒழுங்கு ஆச்சரியப்படத்தக்கது. எங்கு பார்த்தாலும் வரிசையில் நிற்கும் ஒழுங்கு கூட தனிமனித சுதந்திரத்தை மதித்தலின் ஒரு பிரதிபலிப்புதான். நீ முதலில் வந்தாய் அதனால் உனக்குத்தான் முதலில் அனுமதி என்று எல்லோரும் அமைதி காத்து பொறுமையாக வரிசையில் நிற்பது என்ற ஒழுங்கெல்லாம் சிறுவயது முதலே கற்றுக்கொடுக்கப்பட்டுவிடுகிறது.
அதே போல் செய்யும் தொழிலில் ஏற்றத்தாழ்வு பாராமையும் மதிக்கத்தக்க ஒன்று. தொழிலால் யாரும் யாரையும் வேறுபடுத்துவதில்லை. சம்பள வித்தியாசமும் பெருமளவில் இருப்பதில்லை. பொருளாதாரம் இதில் பெரும்பங்கு வகித்தாலும், தனி மனிதனுடைய மனப்பான்மை இதில் முக்கியமானது.
மேலே சொன்னவை சில உதாரணங்கள் தான், ஆனால் இங்கு பார்க்கும் பெரும்பாலான நல்ல விஷயங்கள் அனைத்துக்கும் 'தனிமனித சுதந்திரத்தை மதித்தல்' தான் அடிப்படையாக இருக்கிறது. இந்தியாவில் இருந்தவரைக்கும் அவை பற்றி எதுவுமே சிந்திக்காமல் இருந்த மனது இங்கு வந்து இந்த சூழல் பழகி, இந்தமுறை விடுமுறைக்காக இந்தியாவுக்கு சென்றிருந்த போது தான் எந்த அளவிற்கு நமது சமுதாயத்தில் தனிமனித அத்துமீறல்கள் நடக்கின்றன என்பதை உணர முடிந்தது.
ஏன் இப்படி இருக்கிறோம் என்று சிந்தித்து பார்த்தால் அவையெல்லாம் நாம் வளர்ந்த, வளர்க்கப்பட்ட சூழல் அப்படி என்பதை உணர முடிகிறது. நாமும் அதையே அப்படியே இயல்பாக ஏற்றுக்கொண்டு வளர்ந்து விட்டோம் என்பதையும் உணர முடிகிறது. சரி இந்த சூழல் எப்படி மாறும் என்று என்னை நானே கேட்டுகொண்டால் அதை 'உன்னிலிருந்து ஆரம்பித்து செயல்படுத்து!!' என்று உள் மனது சொல்கிறது. அதுவும் சரி தான்....