Friday, August 26, 2005

How to eat an elephant? - Part 8

பெரும்பாலான பயிற்சி முகாம்களில் சொல்லப்படும் ஒன்று 'How to eat an elephant?'

யாருக்காவது விடை தெரியுமா?....விடை சுலபம். 'By cutting in to small pieces'.

அது எதற்காக சொல்லுவதென்றால், எந்த ஒரு குறிக்கோள் மற்றும் லட்சியம் அனைத்தும் முதலில் பார்ப்பதற்கு யானையைப்போல் பெரிதாகத்தான் இருக்கும். ஆனால் அதை அடைவதற்கான வழிமுறைகளை சிறு சிறு short term goal-களாக மாற்றிவிடுங்கள். அதன் பிறகு short term Goal-களை தினசரி வேலைகளாக மாற்றி திட்டமிடுவது தான் லட்சியத்தை அடைவதற்கான ஒரே வழி.

Stephen covey சொல்லியிருப்பார்,
'efficiency' மற்றும் 'effectiveness' இரண்டுக்கும் என்ன வித்தியாசம்.
efficiency என்பது செய்யும் வேலையை சரியாக செய்வது. effectiveness என்பது சரியான வேலையை செய்வது.

எனவே முதலில் சரியான வேலையை செய்ய வேண்டும் அடுத்து அந்த சரியான வேலையை சரியாக செய்யவேண்டும். படிக்க கொஞ்சம் விசுத்தனமாக இருப்பதற்கு மன்னிக்கவும்.

சரி நாம் செய்யும் வேலை சரியாக இல்லையா என்று எப்படி கண்டுபிடிப்பது?
அது நமது வாழ்க்கை லட்சியம் இருக்கும் திசையை சார்ந்து இருக்கிறதா என்றுதான். அதை செய்வதால் ஏதேனும் நமது வாழ்க்கைக்கு value addition எதுவும் இருக்கிறதா என்று தான்.

கீழிருக்கும் படத்தைப்பாருங்கள். இந்தப்படத்தில் மேலே இருப்பது வாழ்க்கையின் லட்சியம். அது சிறு சிறு குறிக்கோள்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த குறிக்கோள்கள் சிறு சிறு திட்டமிடல்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக நம் வாழ்க்கையின் லட்சியம் ஒரு பெரிய தொழிலதிபராவது என்று வைத்துக்கொள்வோம்.

குறிக்கோள்களாக கீழ்க்கண்டவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
1) எந்த துறையில் தொழில் ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்வது.
2) தொழில் சம்பந்தமான நுணுக்கங்களை கற்றுக்கொள்வது
3) தொழிலுக்கு தேவையான மூல தனத்தை திரட்டுவது.
4) சிறிய அளவில் தொழிற்சாலை ஆரம்பிப்பது.
5) தொழிற்சாலையை விரிவு படுத்துவது.

அதற்கு அடுத்த அளவில் ஒவ்வொன்றையும் தினசரி திட்டமிடல்களாக மாற்றலாம்,

1) தொழில் சம்பந்தமான புத்தகங்களை படித்தல்.
2) பகுதி நேர நிர்வாக சம்பந்தமான படிப்பு பற்றி விசாரித்தல்
3) வங்கிகளில் முதலீடு பற்றிய செய்திகளை அறிந்து கொள்ளல்.
4)......

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இது ஒரு எளிய எடுத்துக்காட்டு.

பெங்களூரில் பணிபுரிந்துகொண்டிருக்கும்போது கலந்து கொண்ட ஒரு பயிற்சி முகாமில் இது பற்றிய ஒரு Role Play இருந்தது. அதை முடித்தவுடன் எனக்குத்தெரிந்த ஒருவர் ITC யில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அருமையான வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்தமாக தொழில் ஆரம்பித்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், @நான் சிகரெட் தொழிற்சாலையில் செய்து கொண்டிருக்கும் வேலை எனது personal value system-க்கு எதிராக இருக்கிறது. அதனால் என்னுடைய குறிக்கோளை என்னுடைய value system-க்கு தகுந்தது போல் அமைத்துக்கொண்டுள்ளேன்" என்றுதான்.

இன்றே தனிமையில் அமருவோம், நம்மை பற்றி நாமே ஒரு சுய ஆராய்ச்சி பண்ணுவோம். நம்மை நாமே கேட்போம் நாம் என்னவாக ஆக விரும்புகிறோம் என்று... என்ன சாதிக்க விரும்புகிறோம் என்று.. அதன் பின்பு அது பற்றி கனவுகாண்போம். நமது சிந்தனைகளை அது பற்றியே சுழல விடுவோம். பின்பு அது பற்றிய சிந்தனைகளை பட்டியலிடுவோம்... சிறிது சிறிதாக செயல்படுத்துவோம். அந்த சிறிய சிறிய வெற்றிகள் தரும் நம்பிக்கை நம்மை நம் லட்சியத்திற்கு வெகு சீக்கிரத்தில் எடுத்துச்செல்லும்....

Wednesday, August 24, 2005

நேர நிர்வாகம் - Time Management - Part 7

இதுவரை உடலளவிலும் மனத்தளவிலும் நம்மை எப்படி தயார் படுத்திக்கொள்வது என்பது பற்றியான கருத்துக்களை விவாதித்தோம். இந்த பதிவில் நம் அனைவருக்கும் முக்கியமான ஒன்றான நேர நிர்வாகம்' (Time Management) பற்றி பார்ப்போம்.

நேரம் தான் நம்மிடம் இருக்கும் முக்கியமான மூலதனம். அதை சரியாக நிர்வகித்தால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். நம்மில் பலருமே நம்முடைய சோம்பல் குணம் மற்றும் தள்ளிப்போடும் குணத்திற்கு நேரத்தைத்தான் குற்றம் சாட்டிக்கொண்டுருக்கின்றோம். நம்மில் எல்லோரும் வாழ்வில் ஒருமுறையாவது 'எனக்கு நேரமே பத்துவதில்லை' என்று அங்கலாய்த்திருப்போம்.

முதலில் நாம் நமக்கு ஒரு நாளில் எவ்வளவு நேரம் கிடைக்கிறது என்று பார்ப்போம்.

வார நாட்களில்,
தூக்கம் = 8 மணி நேரம்.
அலுவலகம் = 9 மணி நேரம்.
அலுவலகம் போய் வர பயணம் = 2 மணி நேரம்.
காலைக்கடன்கள் = 1 மணி நேரம்
காலை இரவு உணவு உண்பதற்கு = 1 மணி நேரம்.
ஆக மொத்தம் = 21 மணி நேரம்

ஆக வார நாட்களில் நமக்கு 3 மணி நேரம் கிடைக்கிறது.

வாரக்கடைசிகளில்.
தூக்கம் = 10 மணி நேரம்.
காலைக்கடன்கள் = 1 மணி நேரம்.
உணவருந்தல் = 2 மணி நேரம்.

ஆக வாரக்கடைசிகளில் மொத்தம் 9 மணி நேரம் நமக்கு கிடைக்கிறது.

நாம் பெரும்பாலும் நம் கையில் இருக்கும் இந்த முப்பது மணிக்கும் மேலான நேரத்தை சரியாக திட்டமிடாததால், தேவையில்லாத காரியங்களுக்கு உபயோகிக்கிறோம். Time is money என்று மிகச்சரியாகத்தான் சொன்னார்கள். கையில் இருக்கும் பணத்தை திட்டமிடாவிட்டால் எப்படி கரையும் என்பதே தெரியாது. அதே போல் தான் நமது நேரமும்.

நம்மில் எல்லோருக்கும கீழ்க்கண்ட பெரும்பாலானவற்றை செய்ய ஆசை.

1) தியானம்
2) உடற்பயிற்சி
3) நூலகங்களுக்கு சென்று நல்ல புத்தகங்கள் படித்தல்.
4) வாகனம், வீடு ஆகியவற்றை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ளல். (இதை டைப் பண்ணும் போது தான் பார்க்கிறேன், மானிட்டர், கீ போர்டில் அவ்வளவு அழுக்கு :-( )
5) மனைவி மக்களுடன் கடற்கரை அல்லது பூங்காவிற்கு அழைத்துச்சென்று மனதை இதப்படுத்திக்கொள்ளல்.
6) உறவினர்களிடம் தொடர்பில் இருத்தல்.
7) வீட்டில் தோட்டம் இடல் அல்லது தோட்டத்தை பராமரித்தல்.
8) பகுதி நேர மேற்படிப்பு படித்தல்.

ஆனால் எவ்வளவு பேர் அவற்றை தொடர்ந்து செய்கிறோம்? பழி போடுவதற்குத்தான் இருக்கிறதே பாவம் 'நேரம்'.

சரி, நேரத்தை எப்படி நிர்வகிப்பது?

நேர நிர்வாகம் என்பது பெரிய ஒன்றும் கடினமான ஒன்றும் இல்லை. எளிதாக சொல்லுவதென்றால் பணத்தின் செலவுக்கு budget போடுவது போல் நம்மிடம் இருக்கும் நேரத்துக்கு budget போடுவது.

1) ஒவ்வொரு நாளும் அன்றைய நாளுக்காக திட்டமிடுதல்.
2) திட்டமிடுதலை, முடிந்த வரை நிறைவேற்றுதல்.
3) நிறைவேற்ற முடியாதவற்றை ஆராய்தல்.

சிலபேரை பார்த்திருப்பீர்கள் தொடர்ந்து வேலை பார்த்துக்கொண்டே இருப்பார்கள். ஆனால் output அந்த அளவுக்கு இருக்காது. ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் 'Don't work hard. Work Smart' என்று. அதாவது கடினமாக வேலை செய்யாதே, புத்திசாலித்தனமாக வேலை செய். நேர நிர்வாகம் என்பது புத்திசாலித்தனமாக வேலை செய்ய உதவும் ஒரு கருவி.

சில பேர் நான் ஒரு palm top வாங்க வேண்டும் அதன் பிறகு தான் என்னுடைய வேலைகளை நிர்வகிக்க வேண்டும் என்று இதைத்தள்ளிப்போட்டுக்கொண்டே போவதை பார்த்திருக்கிறேன். அது போன்ற உபகரணங்கள் எல்லாம் தேவையே இல்லை. visiting card- அளவுக்கு இருக்கக்கூடிய ஒரு காகிதம் இருந்தாலே போதும். அதிலிருந்து ஆரம்பிக்கலாம். அல்லது ஒரு டயரி இருந்தால் போதும். எப்போதும் கணினியின் முன்னால் இருப்பவர்கள் outlook அல்லது yahoo போன்றவை கொடுக்கும் வசதிகளை பயன்படுத்தலாம்.

இன்னும் எளிதாக்குவதற்கு நேர நிர்வாகத்தை நாம் இரண்டாக பிரித்துக்கொள்ளலாம்.

1) அலுவலக நேர நிர்வாகம்
2) வீட்டு நேர நிர்வாகம்.

- வீட்டு வேலைகளை முந்தைய நாள் படுக்கப்போகும் முன்பு திட்டமிடுதல் நல்லது.
- அதே போல் முதலில் ஆரம்பிக்கும்போது எளிதான சாதிக்கக்கூடிய அளவிற்கு திட்டமிடலாம்.
- அதே போல் அலுவலகத்திலும் அன்றைய வேலைகளை ஆரம்பிப்பதற்கு முன்பே திட்டமிடுதல் மிகவும் பயனுள்ளது.
- ஒவ்வொரு வேலையையும் முடித்தவுடன் அதை அடித்து விடலாம் அது அடுத்த வேலையை செய்வதற்கான உற்சாகத்தைக்கொடுக்கும்.
- அலுவலகத்தில் அந்த நாளின் முடிவில் எவ்வளவு திட்டமிட்டோம் எவ்வளவும் முடித்திருக்கிறோம் என்று சரி பார்த்துக்கொள்வது நல்லது. அதே போல் இரவு
படுக்கப்போகும் முன் இதை அலசுதல் நல்லது. இது நமது திட்டமிடும் திறனை வளர்க்கும்.
- நிறைவேற்ற முடியாதவற்றை பற்றி அலசுதல், அதை நிறைவேற்ற என்னவெல்லாம் தேவைபடுகிறது என்று திட்டமிடுதல் மிகவும் அவசியம்.

மேலே சொல்லியவை ஒரு எளிய ஆரம்பத்திற்கான வழி முறைகள். ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாமே?

Saturday, August 20, 2005

மன அழுத்தம் (mental stress) - Part 6

இயந்திர வாழ்க்கையில் நாம் எத்தனையோ வகைகளில் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றோம். பணப்பிரச்சினை, வேலை மாற்றம், இட மாற்றம் மற்றும் குடும்பப்பிரச்சினைகள் போன்ற எத்தனையோ விஷயங்கள் நமது உணர்ச்சிகளை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன. விளைவு மன அழுத்தம்.

இது போன்ற மன அழுத்தம், மனக்குழப்பம், மனச்சோர்வு அனைத்தும் மனித உணர்ச்சிகளின் ஒரு பகுதிதான். ஆனால் அதை எப்படி கையாளுகிறோம் என்பதில் தான் நமது வெற்றியே இருக்கிறது. நம்மில் நிறைய பேருக்கு நமக்கு மன அழுத்தம் இருக்கிறது என்ற ஒன்றே தெரியாமல் இருக்க்கிறது. விளைவு நமது மன அழுத்தின் வெளிப்பாடாக எழும் கோபத்தை வேறு எதன் மீதாவது யார் மீதாவது காண்பிக்க வேண்டிய நிர்பந்தம். அதனால் மீண்டும் மன அழுத்தம்.... இப்படியே ஒரு சுழல்...

சரி... நமக்கு மன அழுத்தம் இருக்கிறது என்று எப்படி கண்டுபிடிப்பது?

- எப்பொழுதும் சோர்வாக இருப்பது
- அளவுக்கதிகமான கோபம்
- எதற்கெடுதாலும் எரிந்து விழுவது.
- சரியான தூக்கமின்மை.
- எதிலும் கவனம் செலுத்த முடியாமை மற்றும் முடிவெடுக்க முடியாமை.
- அதிகமான புகைப்பிடித்தல் மற்றும் குடிப்பழக்கம்.

சரி, மன அழுத்தத்தை யாருடைய உதவியும் இல்லாமல் நானே சமாளித்துவிடுவேன் என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். இதற்கு ஒரே மருந்து பகிர்தல் தான். மனம் விட்டுப்பேசுதல் தான். அது வாழ்க்கை துணையாக இருக்கட்டும் அல்லது நண்பராகவோ அல்லது அதுவும் இல்லாவிட்டால் நமது சுயத்தை தெரிவிக்காமல் பகிர்தலுக்காகவென்றே நிறைய குழுக்களும் இணையத்தில் இருக்கின்றன. அதுவும் முடியாவிட்டால் நல்ல மருத்துவரை நாடுவது தான் நல்லது.

பெண்களாவது பரவாயில்லை... ஆண்கள் பெரும்பாலும் வேரொருவடன் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மனம் விட்டுப்பேசுவதில்லை. உள்ளுக்குள் வைத்து புழுங்கிக்கொண்டிருப்பது மன அழுத்தத்தை அதிகரித்து நிலைமையை மேலும் மோசமாக்குகிறது.

பகிர்தலைத்தவிர மன அழுத்தத்தை குறைக்க வேறென்ன செய்யலாம்?

-தியானம் - மிக முக்கியமான ஒன்று. அவை உங்களின் சுயத்தை உணர்வதற்கு உதவுகின்றன. இதைப்பற்றி பின்பு வரும் பதிவுகளில் நிறைய பார்க்கலாம்.
-ஏதாவது விளையாட்டு, கலை அல்லது இசையில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளலாம்.

இதை முயற்சி செய்து பாருங்கள்.

- அருகிலிருக்கும் பூங்காவிற்கு சென்று மகன்/மகள், அல்லது நண்பர்களுடன் சென்று எளிய விளையாட்டுக்களை விளையாடுதல்.(பந்து, தட்டு விளையாட்டு)
- நல்ல மனதுக்குப்பிடித்த இசையை கேட்டல்
- நல்ல புத்தகங்களை படிப்பதற்கு நேரம் ஒதுக்கி படித்தல்.
- நம் பழைய நண்பர்களுடன் தொடர்பு கொண்டு இனிமையான பழைய நினைவுகளை தட்டி எழுப்பி பகிர்ந்து கொள்ளல்.
- அதிகாலையில் கொஞ்சம் சீக்கிரமாக எழுந்திரித்து நடை, ஓட்டம் அல்லது cycling செல்வது உடற்பயிற்சி மட்டும் அல்ல, மனப்பயிற்சியும் கூட.

அதிகாலையில் எழும்பும் சூரியன் எவ்வளவு அழகு தெரியுமா?

Monday, August 15, 2005

KISS - Keep It Short & Simple - Part 5

போன பதிவில் சீரான உணவுகளை பற்றியும் ஆரோக்கியமான உணவுப்பழக்கங்களைப்பற்றியும் பார்த்தோம். இந்த பதிவில் ஆரோக்கியமான உணவை சரியான அளவில் உண்பது என்பது பற்றி பரிசீலிப்போம்.

நாம் தேவைக்கதிகமாக உண்கிறோமா இல்லையா என்பதற்கான முக்கியமான காட்டி என்பது நமது உடலின் எடை தான். ஆரோக்கியமான உணவு, அதற்கேற்ற உடல் அசைவு என்பது மட்டுமே நமது உடலின் எடையை கட்டுப்படுத்துவதாக இருக்கும்.

நாம் நமது உயரத்திற்கு ஏற்ற எடைக்குள் இருக்கின்றோமா என்பதை கண்டு பிடிக்க BMI (Body Mass Index) Ratio என்ற விகிதக்கணக்கு உதவுகிறது.

கீழ்க்கண்ட படம் நமது உயரத்திற்கு நாம் எவ்வளவு எடை இருக்கலாம் என்று கண்டுபிடிக்க உதவுகிறது.


நீங்கள் OK என்றிருக்கும் விகிதத்துக்குள் இருந்தால், keyboard மற்றும் mouse-லிருந்து கையை எடுங்கள்......., வலது கையை மேலே தூக்குங்கள்......., அப்படியே பின்புறமாக கொண்டு செல்லுங்கள்......., அப்படியே உங்கள் முதுகில் மூன்று முறை தட்டிக்கொண்டு சத்தமாக சொல்லுங்கள்...... "Well done".

சரி Over weight என்று இருப்பவர்கள் எல்லாம்?....ஒன்றும் குடிமுழுகிப்போய்விடவில்லை. இப்போது பிரச்சினை எதுவென்று உணரத்தொடங்கிவிட்டீர்கள். அதுவே பாதி வெற்றி தான்.

Fat & Very Fat என்று இருக்கும் எடைக்குள் இருப்பவர்கள்.........this is the high time. நீங்கள் உடல் ஆரோக்கியத்தின் மேல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றீர்கள்.

இதற்கு இரண்டு பதிவுகளுக்கு முன்னால் எப்படி சிறிய அளவில் உடற்பயிற்சிகளை ஆரம்பிப்பது என்று பார்த்தோம். அனைவருக்கும் KISS பிடிக்கும் இல்லையா?... அதாவது Keep It Short & Simple....:-) ... சிறிய அளவிலான உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்வது மனதுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கின்றது. அந்த தன்னம்பிக்கை நம்மை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும்.

சுறுசுறுப்பான வாழ்க்கை நமக்கு,

-நல்ல உடல்வாகு
-அதிக தெம்பு மற்றும் உற்சாகம்
-அதனால் நல்ல சுய நம்பிக்கை.
-அதனால் வாழ்க்கையில் வெற்றிக்கு தேவையான மற்றவை எல்லாமும்......

இப்போது முதலிருந்து வருவோம். முதல் பகுதியில் இயந்திர வாழ்க்கை பற்றியும் அது பற்றிய ஒரு அறிதல் பற்றியும் பார்த்தோம். பின்பு வாழ்க்கையில் வெற்றிக்கான வெவ்வேறு புத்தகங்களில் கொடுக்கப்பட்டவைகளின் சாராம்சத்தைப்பார்த்தோம்.அடுத்த பதிவில் எதிலிருந்து ஆரம்பிப்பது என்று சிறிய அளவிலான உடற்பயிற்சிகள் பற்றி பார்த்தோம். அதற்குப்பிறகு சீரான உணவு பற்றியும் ஆரோக்கியமான உணவுப்பழக்கங்களைப்பற்றியும் பார்த்தோம்.

நான் முன்பே சொன்னபடி, இதில் நமக்கு தெரியாத விஷயங்கள் எதுவும் இல்லை. இந்த தொடரின் நோக்கம், தெரிந்த விஷயங்களைக்கொண்டே எளிதான ஒரு ஆரம்பித்தலுக்கான ஒரு தூண்டுதலை ஏற்படுத்துவது தான்.

(தொடரும்)

Saturday, August 13, 2005

சீரான உணவு - you are what you eat - Part 4

போன பதிவில் எளிய உடற்பயிற்சிகளுக்கு எப்படி தயாராவது என்று பார்த்தோம். இந்த பதிவில் ஆரோக்கியமான உணவுப்பயிற்சி முறைகளைப்பற்றி பார்க்கலாம்.

நான் முன்பே சொன்னபடி இதில் நமக்கு தெரியாத விஷயங்கள் எதுவும் இல்லை. சில விஷயங்களை திரும்ப திரும்ப படிப்பது மனதில் ஆழமாக பதியும்.

முதலில் இதயத்தைப்பற்றி, இதயம் நமது உடம்புக்குள் டிக்கிகொண்டு இருக்கும் ஒரு பம்ப். அது வாரத்தில் ஏழு நாட்களும், ஒரு நாளில் 24 மணி நேரமும் தொடர்ந்து ரத்தத்தை உடம்புக்குள் ஓடச்செய்து கொண்டு இருக்கிறது. அதற்குப்பதிலாக அது எதிர்பார்ப்பதெல்லாம் குறைந்த அளவிலான தொடர்ந்த பராமரிப்பு தான்.

இதயத்தை சரியாக பராமரிக்க,

1) புகைபிடிக்கும் பழக்கத்திலிருந்து முற்றிலும் விடுபடுதல்,
2) நல்ல ஆரோக்கியமான உணவுப்பழக்கம்
3) சீரான தேகப்பயிற்சி
4) உடம்பின் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ளல்.
5) குடிப்பழக்கத்திலிருந்து விடுபடுதல். முடியாவிட்டால், கட்டுப்பாடுள்ள குடிப்பழக்கம்.

நமது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இவற்றைவிட்டால் வேறு மேஜிக் எதுவும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், இப்போது ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால் எதிர்காலத்தில் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.எனக்கு இதயத்தில் எந்த வலிக்கான அறிகுறியும் இல்லை அதனால் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். வலிதான் பிரச்சினைகளுக்கான ஒரே அறிகுறி என்பது அறியாமை.

முதலில் சீரான உணவுப்பழக்கத்தைப்பற்றி,

ஆரோக்கியமான உணவுப்பழக்கம் என்பது உங்களுக்கு பிடித்த உணவு வகைகளை விட்டுவிடச்சொல்வதல்ல. ஆனால் எவ்வளவு தின்னலாம் என்பதைப்பற்றியது. பெரும்பாலோர் டயட் என்றால் வெறும் பழங்களையும், காய்கறிகளையும் தின்பது தான் என்று தவறாக எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். நமது உடம்பு எதிர்பார்ப்பதெல்லாம் வித்தியாசமுள்ள சீரான உணவுகள் தான்.

சீரான உணவு என்றால் என்ன?

எளிதாக புரிந்து கொள்ள நமது உணவுகளை ஐந்து வகைகளாக பிரித்துக்கொள்ளலாம். அதற்கு அருகில் அது எவ்வளவு தேவைப்படுகிறது என்பது சதவீதத்தில்,

1) பழங்கள் மற்றும் காய்கறிகள் - 35%
2) அரிசி,கோதுமை,ப்ரட் மற்றும் கிழங்கு வகைகள் -30%
3) பால் சம்பந்தப்பட்ட உணவுப்பொருள்கள் -15%
4) கொழுப்புசத்து மிகுந்த பொருள்கள் -5%
5) மீன், இறைச்சி அல்லது பயறுவகைகள் - 15%

நீங்கள் உங்கள் உணவுப்பழக்கத்தை முற்றிலும் இன்றே இப்போதே மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது இல்லை. ஆனால் இன்றிலிருந்து எளிதான சிறிய மாற்றங்களை ஏற்படுத்திப்பாருங்கள். உங்களுக்கே வித்தியாசம் தெரியும்.

கீழ்க்கண்டவற்றை முயற்சித்துப்பாருங்களேன்.
- ஒருநாளைக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு நீர் அருந்துதல்.
- அதிக நார்ச்சத்து உள்ள உணவுகள் மிகவும் ஆரோக்கியமானவை.
- வசதிக்கு தகுந்தது போல் எவ்வளவு பழங்கள் அல்லது பழரசங்கள் முடியுமோ அவ்வளவு.
- உணவை எண்ணையில் வறுத்து உண்பதற்கு பதிலாக அவித்து உண்ணுதல்.
- மீன் உடம்புக்கு நல்லது. இறைச்சிக்கு பதிலாக மீன் அதிகமாக பயன்படுத்தலாம்.
- சக்கரையை குறைத்துக்கோள்ளல் (சக்கரையை சிறிதாக குறைத்துக்கொண்டால் நமக்கு முதல் sip-ல் மட்டும் தான் வித்தியாசத்தை உணர்வோம் அப்புறம் தெரியாது)
- உப்பை குறைத்துக்கொள்ளுதல்.

சீரான உணவு மற்றும் அல்ல, சீரான உணவை எவ்வளவு உண்கிறோம் என்பது மிகவும் முக்கியம். அதை எப்படி கண்டு பிடிப்பது? அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

(தொடரும்)

Thursday, August 11, 2005

எது முக்கியம்? எப்படி ஆரம்பிப்பது? - Part 3

போன பதிவில் சுய முன்னேற்ற நூல்களின் சாராம்சத்தை பார்த்தோம். மேலும் அவற்றை நடைமுறைப்படுத்த முடியாமையில் நாம் கற்பிக்கும் காரணங்களையும் பார்த்தோம்.

எல்லாம் தெரியும் நமக்கு. ஆனால் எதிலிருந்து ஆரம்பிப்பது?
அப்போதெல்லாம் கம்ப்யூட்டர் கற்பிக்க மனிதனின் உடற்கூறுகளை உதாரணமாக காட்டுவார்கள். இப்போது எதிலிருந்து ஆரம்பிப்பது என்று விளக்க நாம் கம்ப்யூட்டர் பாகங்களை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

ஒரு நல்ல கம்ப்யூட்டரை எவை உருவாக்குகின்றன.

1) நல்ல specification உள்ள hardware.
2) நல்ல processor
2) நல்ல ஒரு operating system.
3) நல்ல softwares
4) நல்ல bandwidth உள்ள internet connection.

இதுவும் எல்லோருக்கும் தெரிந்தது தானே!!. இங்கு disclaimer எல்லோருக்கும் எல்லாமும் தெரியும். எனக்கென்னவோ ஒரு ideal மனிதனை அடையாளமாக எடுத்துக்கொண்டு தான் கம்ப்யூட்டரையே உருவாக்கியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

அதன் படி பார்த்தால், நமக்கு மிகவும் முக்கியமானது, ஆரோக்கியமான உடல்.
துரதிஷ்ட வசமாக கம்ப்யூட்டரை upgrade செய்வது போல் உடல் பாகங்களை upgrade செய்ய இயலாது :-)

எனவே, இருக்கும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது முக்கியமாகிவிட்டது.
எப்படி ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது?

1) நல்ல உணவுப்பழக்கம்
2) உடற்பயிற்சி.
3) நல்ல தூக்கம்.
4. ஏதாவது ஒரு விளையாட்டில் நம்மை தொடர்ந்து ஈடுபடுத்திக்கொள்ளல்.

இதில் ஒன்று கவனித்தீர்கள் என்றால், நல்ல மன உறுதி இருந்தால் தான் இவற்றை தொடர்ந்து செய்ய இயலும். ஆனால் மனம் உறுதிப்படுவதற்கு நல்ல ஆரோக்கியம் அவசியம். ஆரோக்கியமான உடல் இருந்தால் தான் ஆரோக்கியமாக சிந்திக்க முடியும். எனவே மனப்பயிற்சி, உடல் பயிற்சி இரண்டிற்குமான ஒரு balance மிகவும் முக்கியம்..

உடற்பயிற்சி என்றால், ஒன்றும் பெரிதாக உடற்பயிற்சிக்கூடத்திற்க்கு போய் தான் செய்யவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

-பக்கத்திலிருக்கும் கடைக்கு நடந்து போய் வரலாம்.
-அலுவலகம் நடக்கும் தூரத்திலிருந்தால் நடந்து போய் வரலாம். சற்று தூரத்தில் இருந்தால் சைக்கிளில் செல்லலாம்.
-lift உபயோகிக்காமல், படியில் நடந்தேறலாம்.
-நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்தல் நடத்தல் கூட ஒருவகையில் உடற்பயிற்சி தான். நாம் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
-அலுவலகத்தில் இருக்கையில் அமர்ந்து கொண்டே செய்யக்கூடிய stretching உடற்பயிற்சிகள் நிறைய இருக்கின்றன.

இதற்கு அடுத்த லெவலில், நமது உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் அசைவு கொடுக்கும் அற்புதமான ஒரு உடற்பயிற்சி - 'சூரிய நமஸ்கரணம்'. இது ஒரு உடற்பயிற்சி மட்டுமல்ல, சிறந்த மூச்சுப்பயிற்சியும் கூட...கற்றுக்கொள்வதும் மிகவும் எளிது.


மேலே உள்ள படத்தில் சூரிய நமஸ்கரணத்தின் அனைத்து நிலைகளும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. சிலர் சொல்லுவார்கள், யோகாவை முறையாகத்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று. அது எந்த அளவுக்கு சரி என்று தெரியவில்லை. ஆனால் சூர்ய நமஸ்கரணம் ஒரு எளிய ஒன்று.ஒரு முறைதான் முயன்று பார்க்கலாமே !!!

(தொடரும்)

Wednesday, August 10, 2005

சுய முன்னேற்ற நூல்களின் சாராம்சம் - Part 2

நாம் படிக்கும் பெரும்பாலான சுய முன்னேற்றம் சம்பந்தமான புத்தகங்களில் கொடுத்திருப்பவற்றின் சாராம்சத்தை வகைப்படுத்தி பட்டியலிடலாம் என்று நினைத்தேன்.

சுயம் சம்பந்தப்பட்டவை:
1) தன்னம்பிக்கை
2) முடிவெடுக்கும் திறமை.
3) தெளிவான சிந்தனை.
4) வாழ்க்கையில் குறிக்கோள்.
5) திட்டமிடல்.
6) மனோதைரியம்.
7) ஆக்கபூர்வமான சிந்தனை.
8) assertiveness (மன உறுதி)
9) வருமுன் காத்தல்.
10) பொறுப்பேற்றுக்கொள்ளுதல்.
11) ஆரோக்கியமான உடல்
12) ஒழுக்கம்.
13) கடுமையான உழைப்பு

சமூகம் சார்ந்தவை:
1) இனிமையான பேச்சு
2) வாக்குத்தவறாமை.
3) நம்பகத்தன்மை.
4) பிறர் சொல்லுதை கேட்கும் தன்மை.
5) உதவும் தன்மை.
6) leadership skills.
7) நேர்மை.
8) நேரந்தவறாமை
9) அடுத்தவரின் சுதந்திரத்தை மதித்தல்.
10) நகைச்சுவை உணர்ச்சி
11) பிறருக்கு உண்மையாக இருத்தல்.
12) கடமை உணர்ச்சி

உத்திகள்(techniques):
1) தியானம்
2) யோகா
3) உடற்பயிற்சி
4) நம்மை நாமே motivate பண்ணிக்கொள்ள உதவும் auto suggestion techniques.
5) பேச்சுத்திறமையை வளர்த்துக்கொள்ள உதவும் உத்திகள்.
6) நேரத்தை நிர்வாகித்தல் தொடர்பான உத்திகள்.
7) Prayer(இது ஒருவிதமான goal setting technique)


கேள்விகள்:

மேலே கொடுத்திருப்பவற்றில் நமக்கு எதைப்பற்றி தெரியாது? சொல்லுங்கள். நமக்கு எல்லாவற்றைப்பற்றியும் தெரியும். ஆனால் நம்மால் எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்திவிட முடிவதில்லையே ஏன்? நடைமுறைப்படுத்த ஆசை ஆனால் எது முக்கியம் என்று தெரியவில்லையே ஏன்?... சிலவற்றையாவது நடைமுறைப்படுத்த சுத்தமாக நேரமே கிடைப்பதில்லையே ஏன்? சிலவற்றை சிலநாட்களுக்கு நடைமுறைப்படுத்தினாலும் அவற்றை தொடர்ந்து செய்ய முடிவதில்லையே ஏன்? எல்லாவற்றையும் நாம் நடைமுறைப்படுத்துவதாக நினைத்தாலும் சுற்றியிருப்பவர்கள் சரியில்லாததால் எல்லாம் வீணென்று நாம் நினைப்பது ஏன்?

so.. பிரச்சினை இருப்பது இனிமையான வாழ்க்கை எப்படி வாழ்வது என்பது தெரியாமல் இருப்பதல்ல !!!!. அவற்றை நடைமுறைப்படுத்தமுடியாமையில் நாம் காரணம் கற்பித்தலில் இருக்கிறது. சரி எப்படி நடைமுறைப்படுத்துவது என்று கேட்கிறீர்களா? கணினி மற்றும் தொலைக்காட்சி இல்லாத தனிமையில் அமருவோம், சிந்திப்போம்.

(தொடரும்)

Tuesday, August 09, 2005

நயாகரா சிண்ட்ரோம் - ஒரு சீரியஸ் பதிவு - Part 1

பெங்களூரில் பணி புரிந்து கொண்டு இருந்த போது பல விதமான சுயமுன்னேற்ற பயிற்சி முகாம்களில் கலந்து கொள்வது உண்டு. எந்த பயிற்சி முகாமுக்கு போனாலும் தெரிந்த அதே விஷயங்கள் தான் வெவ்வேறு பரிமாணங்களில் சொல்லப்பட்டன.ஆனால் வாகனங்களை service -க்கு விடுவது போல், நம் மனதையும் அவ்வப்போது புத்துணர்ச்சிப்படுத்திக்கொள்ள இது போன்ற பயிற்சி முகாம்கள் உதவின.

இப்போது சிந்தித்துப்பார்த்தால் நமது வாழ்க்கையில் பெரும்பாலான நேரம், நாம் வாழ்க்கையின் ஓட்டத்திலேயே போய்க்கொண்டு இருக்கிறோம். நிர்வாகவியலில் இதை 'நயாகரா சிண்ட்ரோம்' என்று சொல்வார்கள். ஓடத்தில் அமர்ந்து கொண்டு ஆற்றின் போக்கிலேயே போய்க்கொண்டு இருக்கும் ஒருவன் சிந்தித்தான். 'ஆஹா... எவ்வளவு அருமையாக இருக்கிறது இந்த பயணம், நாம் துடுப்பு போடவே வேண்டியதில்லை' என்று....அப்படியே பயணத்தை ரசித்துக்கொண்டே போய்க்கொண்டு இருந்தான். சற்று நேரம் கழித்து பார்த்தால் தூரத்தில் இருந்து அருவிச்சத்தம் கேட்டது. அப்புறம் தான் அவன் உணர்ந்தான் அவன் ஒரு அருவியின் விளிம்பில் இருப்பதை. நிலைமையை உணர்ந்து ஓடத்தை திருப்புவதற்குள் காலம் கடந்து விட்டது.

இயந்திரத்தனமான இந்த வாழ்க்கையில் அந்த உணர்தல் சாத்தியப்படுவதில்லை. எதுவுமே நிலையில்லாத இந்த வாழ்க்கைச்சூழ்நிலையில் ஒருவிதமான feel of insecurity -யில் எதிர்காலத்தை பற்றி சிந்தித்து பார்க்கவோ, நிகழ்காலத்தில் நடப்பதை ஆராய்ந்து பார்க்கவே பயமாக உள்ளது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் நமக்கு தெளிவை ஏற்படுத்த புற உதவி தேவைப்படுகின்றது. புற உதவி கீழ்க்கண்டவற்றின் மூலமாக சாத்தியப்படுகிறது.

1) நல்ல வாழ்க்கைத்துணை
2) நல்ல மனம் விட்டு பேசக்கூடிய நண்பர்கள் அல்லது உறவினர்கள்.
3) குருவாக அல்லது வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட ஒருவர்.
4) நல்ல வாசிப்புகள்.

பொதுவாகவே நமக்கு நமது மட்டத்தில் இருக்கும் ஒருவரிம் இருந்து வரும் அறிவுரைகள் பிடிப்பதில்லை. இதற்குக்காரணம் முதலில் EGO-(Edging God Out). இரண்டாவது நுனிப்புல் மட்டத்தில் எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருப்பது தான். அறிவுரைகள் வெறும் அறிவுரைகளாக இல்லாமல் தெளிவுரைகளாகவும், பகிர்ந்துரைகளாகவும் இருந்தால் அவைகள் நம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

நமக்கு தேவைப்படும் புற உதவிகளில் ஒன்றான வாசிப்புகளுக்கு ஏதாக இனி அவ்வப்போது, ஒரு வாசிப்பாளனின் கண்ணோட்டத்தோடு ஒரு தேடலின் பயணத்தைப்பற்றி தொடர்ந்து எழுதலாம் என்றிருக்கிறேன். எப்படி ஆரம்பிப்பது என்று தான் ஒரே குழப்பமாக இருந்தது. இதோ உதவிக்கு அறிஞர் பிளேட்டோ 'ஒரு வேலையில் முக்கியமான பகுதி என்பது அதன் ஆரம்பம் தான்'.

(தொடரும்)

Monday, August 08, 2005

எங்கேயோ பார்த்த ஞாபகம்....

இது போன்ற படத்தை எங்கேயோ பார்த்த ஞாபகம். :-)))



தெரிந்தால் யாராவது நினைவு படுத்துங்களேன் !!!!!

Sunday, August 07, 2005

தொப்பை - ஒரு உலகப்பிரச்சினை.

இந்தப்பதிவை படிக்கும் யாவரும் இதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளமாட்டார்கள், அவர்களுக்கு தொப்பை இருக்கிறதென்று. இது ஒருவிதமான உலகப்பிரச்சினை ஏனென்றால் இது உலகத்தில் தொன்னூறு சதவீதத்திற்க்கும் அதிகமான மக்களுக்கும் உள்ள பொதுப்பிரச்சினை. ஆனால் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்பட்ட பிரச்சினை.

முதலில் தொப்பை என்பது இயல்பா அல்லது விதிவிலக்கா? -என்பது தான் பெரும்பாலானோருக்கான சந்தேகமும், சாதகமாக எடுத்துக்கொள்ளக்கூடிய ஒரு சந்தர்ப்பமும் கூட...:-).. நம்முடைய தினசரி வாழ்க்கையில் நாம் சந்திக்கும் அனைவரையும் கவனித்துப்பாருங்கள். பெரும்பாலோருக்கும் இந்தப்பிரச்சினை இருக்கும். என்னைப்பொருத்தவரை 'தொந்தி' என்பது மனித உடலியல் கூற்றுப்படி ஒரு அங்கமாக கருதப்பட வேண்டும். எப்படி வால் மனிதனின் அங்கத்திலிருந்து அகற்றப்பட்டதோ அதே போல்
'தொப்பையும்' மனிதனின் உடல் அங்கங்களில் ஒன்றாக கருதப்பட வேண்டும்.

சரி, தொந்தி மருத்துவர்களின் கூற்றுப்படி ஒரு நோயாகவே இருக்கட்டும், எத்தனை பேர் இதனை ஒற்றுக்கொள்ள தயாராக இருக்கிறீர்கள். எத்தனை பேர் இதனை தவிர்க்க முயற்சி எடுத்திக்கிறீர்கள்? எடுத்திருக்கிறோம்?. அவ்வப்போது தட்டை வயிறு இருப்பவர்களை பார்க்கும்போது நாளை எழுந்து காலையில் ஜாகிங் போக வேண்டும் என்று தோன்றும் வைராக்கியம் மறுநாள் காலையில் எங்கு மாயமாய் போனது என்பது அந்த தொப்பைக்கே வெளிச்சம்.

நம்மூரில் என்னவோ தொப்பை என்பது போலீஸ்காரர்களுக்கு மட்டுமே உரித்தான ஒரு அடையாளமாக திரித்து சொல்லப்பட்டு வருகிறது. இக்கால இளைஙர்களிடம் கேட்டுப்பாருங்கள், பியர் பெல்லி என்பது ஒரு fashion என்றாகி விட்டது.

வழுக்கை தலை இருப்பவர்களுக்கெல்லாம் சங்கம் இருக்கிறது. 'bald is beautiful' என்றெல்லாம் சொல்லிக்கொள்கிறார்கள். தொப்பை-யர்களுக்கென்று ஏதாவது சங்கம் இருக்கிறதா என்று யாருக்காவது சொல்லுங்கள்.

Belly is beautiful !!! இல்லையா??

Thursday, August 04, 2005

சானியா மிர்ஸா - இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம்

(இரண்டு நாட்களுக்கு முன்பு எழுதிய இந்த பதிவு காணாமல் போய் விட்டது :-(( அதனால் திரும்ப...)

சானியா மிர்ஸா... !! கிரிக்கெட் ஜுரத்தில் மற்ற விளையாட்டுக்கள்
அடிபட்டுக்கிடக்கும் ஒரு நாட்டில், தன் திறமையினாலும் வசீகரத்தாலும்
நாட்டின் கவனத்தை தன் பக்கம் திரும்பச்செய்தவர். இது வரை சானியாவின் ஆட்டத்தை நேரிலோ, தொலைகாட்சிகளிலோ பார்த்ததிராத நான், முதன் முதலில் பார்த்தது விம்பிள்டனில் ரஷ்ய வீராங்கனையான ஸ்வெட்லானாவிற்கு எதிரான அவரின் ஆட்டத்தைத்தான். பார்க்கும் போது தான் தெரிந்தது, மீடியாவில் அவர் பற்றிய் வரும் செய்திகள் எதுவும் மிகைப்படுத்தப்பட்டவை இல்லை என்று.


மும்பையில் பிறந்து ஹைதராபாதுக்கு குடியேறிய ஒரு மத்தியத்தர வகுப்புக் குடும்பத்தில் பிறந்த சானியா, முதன் முதலில் டென்னிஸ் மட்டையை கையில் எடுத்தது அவரது ஆறாவது வயதில். பனிரெண்டாவது வயதில் பதினாறு வயதுக்குட்பட்டவர்களுக்கான தேசிய டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். அப்போது அதிர்டவசமாக அவருக்கு addidas நிறுவனத்திலிருந்து ஸ்பான்சர்ஷிப் கிடைத்தது. 2003-ஆம் ஆண்டு விம்பிள்டன் ஜூனியர் இரட்டையர் பட்டத்தை வென்றார். 2005 ல் இந்த வருட சீசன் ஆரம்பத்தில் ஹைதராபாத் ஓபன் ஏடீபி பட்டத்தை வென்றார்.

இந்த சீசன் ஆரம்பிக்கு முன்பு சானியா உலக டென்னிஸ் தரவரிசையில் 194-வது இடத்தில் இருந்தார். அப்போது, இந்த வருட குறிக்கோள் முதல் ஐம்பது இடத்திற்குள் வருவது என்று சொன்னார். சொன்னபடியே சாதித்துக்காட்டிவிட்டார் இப்போது. நேற்று ரஷ்யாவின் பெட்ரோவாவை வென்றதன் மூலம் முதல் ஐம்பது இடத்துக்குள் வருவது உறுதியாகிவிட்டது.


சானியா அளவுக்கதிகமாக விளம்பரம் தேடிக்கொள்கிறார் என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர். நம் கிரிக்கெட் வீரர்களைவிடவா அதிகமாக விளம்பரம் தேடிக்கொள்கிறார்? அப்படியே இருந்தாலும் அதில் என்ன தவறு? அது நிறைய இளம் வீராங்கனைகள் உருவாகுவதற்குத்தான் வழி வகுக்கும்.

சானியா கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை. அவருடைய ஆட்டத்தை பார்த்தவர்கள் யாரும் இதை பேராசை என்று நிராகரிக்க மாட்டார்கள்..

வாழ்த்துக்கள் சானியா !!!!

Monday, August 01, 2005

ஏ ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி அனுபவம்

முதன் முறையாக லண்டனில் ஒரு இசை நிகழ்ச்சி பார்க்கப்போகிறோம் அதுவும் ஏஆர் ரஹ்மானின் நிகழ்ச்சி என்ற பரவசம் வாரக்கடைசியிலேயே
ஆரம்பித்துவிட்டது. மான்செஸ்டரிலிருந்து இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக என் டாக்டர் நண்பர்கள் வேறு வந்திருந்தார்கள். ஒரு வழியாக வீட்டிலிருந்து கிழம்பி, நேராக சரவண பவனில் சூடாக இட்லி, தோசை, வடை முடித்துவிட்டு சரியாக ஏழு மணிக்கு அரங்கத்தின் உள்ளே இருந்தோம்.

போனவுடன் முதல் ஆச்சரியம்..., வெம்ப்ளி அரினாவின் பிரம்மாண்டம்.அரங்கத்தின் பின்னாலிருந்து பார்ப்பவர்களுக்கு என்ன தெரியும் என்று ஆச்சரியமாக இருந்தது. அரங்கத்தின் உள்ளேயே பைனாக்குலர் வாடகைக்கு கொடுக்கிறார்கள். பின்னாலிருந்து பார்ப்பவர்களுக்காக பிரம்மாண்டமான திரை வைத்திருக்கிறார்கள். அரங்கம் முழுதும் நிரம்பி இருந்தது ( அரங்கத்தின் கொள்ளளவு 11500 பேர்).



கூடவே ஏமாற்றமும்..., முப்பரிமாண நிகழ்ச்சிக்காக மும்பையிலிருந்து வரவேண்டிய உபகரணங்கள் வராத காரணத்தால் நிகழ்ச்சிக்கு முப்பரிமாண கண்ணாடிகள் வழங்கப்படவில்லை. நிகழ்ச்சி அமைப்பாளர்கள் இதற்காக வருத்தம் தெரிவித்து ஒரு கடிதம் கொடுத்தார்கள். மும்பை மழை,வெள்ளத்தை காரணமாக சொன்னதால் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.


வந்திருந்தவர்களில் வட இந்தியர்கள், தென்னிந்தியர்கள் மற்றும் ஈழத்தமிழர்கள் சம அளவில் இருந்தனர். வேறு எந்த நிகழ்ச்சிக்கும் இப்படிப்பட்ட ஒரு mix-ஐ பார்க்க முடியாது. ஏ ஆர் ரகுமானுக்கு இதற்காக நன்றி சொல்ல வேண்டும். என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர்கள் பிரான்சு நாட்டிலிருந்து இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக வந்திருந்தார்கள்.

ஏழு மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய நிகழ்ச்சி, ஏழரை மணிக்கு ஆரம்பித்தது. ஏ ஆர் ரஹ்மான் அட்டகாசமாக அறிமுகப்படுத்தப்பட்டார். எப்போதும் கூச்ச சுபாவத்துடன் இருக்கும் ரஹ்மான் இப்போதெல்லாம் நிகழ்ச்சிகளில் நன்றாக பேச ஆரம்பித்து விட்டார். முதல் நான்கு பாடல்கள் அனைத்தும் இந்திப்பாடல்கள் அதுவும் ரஹ்மானின் புதிய இந்திப்பாடல்கள். அதுவும் நாங்கள் ஒருமுறையும் கேட்டிறாத இந்திப்பாடல்கள். அடடா !! ரஹ்மான் கவுத்துட்டார்-னு கவலையோடு உட்கார்ந்திருந்தோம். அப்புறம் வந்தார்கள் ஹரிஹரனும், சங்கர் மகாதேவனும். மாறி மாறி தமிழ்ப்பாடல்கள் வந்தன. ஒவ்வொரு முறை தமிழ் பாடல்கள் பாடியபோதும் அரங்கமே அதிர்ந்தது. 'அரபிக்கடலோரம்' பாட்டு வந்தபோது அரங்கத்திலிருந்த அனைவரும் எழுந்து ஆட ஆரம்பித்துவிட்டனர். பாம்பே தீம் புல்லாங்குழல் பாட்டு வந்த போது அனுபவித்து ரசித்தது. ட்ரம்ஸ் சிவமணி தனி ஆவர்த்தனத்தின் போது அனைவரையும் ஆட வைத்தார். 3 மணி நேரம் எப்படித்தான் போனது என்றே தெரியவில்லை. கடைசியாக வந்தே மாதரம் பாட்டு ரஹ்மான் பாடியபோது ஒட்டுமொத்த அரங்கமும் சேர்ந்து பாடியது மெய்சிலிர்க்க வைத்தது. மொத்தத்தில் மறக்க முடியாத மூன்று மணி நேரங்கள்.