Sunday, October 23, 2005

நட்சத்திர வாரத்திற்கு நன்றி...

நட்சத்திர வாரத்திற்கு வாய்ப்பு கொடுத்த மதிக்கு மற்றும் பார்த்து படித்த மற்றும் பின்னூட்டமிட்டு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.

கடந்த வாரத்தில் குறிப்பிடத்தக்கவை.

1) ஐம்பதாவது பதிவு
2) பத்தாயிரமாவது பார்வையாளர்.
3) பிறந்த நாள் வாழ்த்துக்கு நமது ஜனாதிபதியிடமிருந்து நன்றி கடிதம்..
4) கடுமையான வேலைப்பளுவுக்கு இடையிலும் இந்த ஒரு வாரத்தில் ஒன்பது பதிவுகள், ஆயிரத்து ஐநூறு பார்வைகள்.

இந்த வாரத்தில் வெளிவந்த சக வலைப்பதிவாளர்களின் அனைத்துபதிவுகளையும் படிக்கமுடியவில்லை. அவை அனைத்தையும் இந்த வாரத்தில் படிப்பதாக உத்தேசம்.

தங்கர் மற்றும் குஷ்பு வாரங்களுக்கு பிறகு இந்த வாரம் தமிழ்மணத்தில் சூடான தலைப்பாக தமிழ்மணத்தில் காசி அவர்கள் எடுத்த சில நடவடிக்கைகள் பற்றிய பதிவுகள் இருந்தன. என்னைப்போறுத்தவரை தமிழ்மணம் எனக்கு தமிழில் எழுதுவதற்கு ஊன்றுகோலாக இருந்த ஒரு தளம். அதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்த காசி அவர்களுக்கு கண்டிப்பாக நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்...

சில மத சார்பான விரோத மனப்பான்மையை தூண்டும் சில பதிவுகளைப்படிக்கும்போது இவையெல்லாம் எந்த அளவுக்கு விரோத மனப்பான்மையை தூண்டுவதாக இருக்கின்றன என்று வருத்தமாக இருந்தது. இவற்றையெல்லாம் தமிழ்மணத்தில் தடை செய்யக்கூடாதா? என்று ஆதங்கமாக இருந்தது உண்மை. ஆனால் ஒரு நடவடிக்கையை நல்ல நோக்கத்தில் எடுக்கும்போது எந்த அளவுக்கு எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று கடந்த வாரத்தில் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

இணையக் குசும்பன் மற்றும் சின்னவன் இருவரின் பதிவுகள் நீக்கப்பட்டது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது உண்மை. தமிழ்மணத்தின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டுத்தான் இதில் சேர்ந்தோம் என்பது உண்மையான வாதமாக இருந்தாலும் அனைவரும் காசியின் முடிவுக்கு எதிராக கருத்துக்களை சொல்வது என்பது எதற்காக என்று பார்த்தால், தமிழ்மணம் பெரும்பாலும் ஒரு நிறுவனத்துக்கு மேலாக, ஒரு குடும்பமாகவே பார்க்கப்பட்டதால் தான்.

இது பற்றிய அனைவரின் கருத்துக்களையும் படித்தபின் காசி அவர்கள் அவரது கருத்துக்களை தெரிவிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதுவரை பொறுத்திருத்தல் தான் ஆரோக்கியமான ஒன்றாக இருக்கும்.

மற்றொருமுறை அனைவருக்கும் நன்றி.

Saturday, October 22, 2005

லண்டன் சுத்திப் பாக்கலாமா? - பாகம் 1

இப்போது இந்தியாவிலிருந்து லண்டனுக்கு நிறைய விமான நிறுவனங்கள் சேவையை ஆரம்பித்துள்ளன. சில விமானங்களில், மிகக்குறைந்த கட்டணத்திலேயே லண்டன் வந்து போகலாம். லண்டனில் ஹீத்ரோ, காட்விக், லூடன், லண்டன் நகர் விமான நிலையம் என்று நான்கு விமான நிலையங்கள். ஆனால் இந்தியாவிலிருந்து வரும் விமானங்கள் அனைத்தும் ஹீத்ரோ(Heathrow) விமான நிலையத்திற்கே வருகின்றன. சில விமானங்கள் காட்விக்(Gatwick) விமான நிலையத்துக்கு வருவது உண்டு.

லண்டன் சுற்றிப்பார்க்க வருவதற்கு தகுந்த காலநிலை எதுவென்று கேட்டால் கோடைகாலம் தான். குறிப்பாக ஏப்ரல் மாதத்திலிருந்து ஆகஸ்டு மாதம் வரை காலநிலை நன்றாக இருக்கும். அதிகாலை ஐந்து மணிக்கே சூரியன் உதித்து இரவு பத்து மணிவரை நன்றாக வெளிச்சமாக இருக்கும். அதனால் வருவதற்கான பயணத்தை அப்போது திட்டமிடுவது நல்லது. உடையை பொறுத்தவரை உச்ச கோடைகாலத்தில் நம்மூரில் அணியும் உடையே போதுமானது. ஆனால் உச்ச கோடைகாலத்திற்கு முன்பும் பின்புமான சமயத்தில் அணிவதற்கு குளிர்கால உடைகளை எடுத்துக்கொண்டு வருவது நல்லது.


தங்குவதற்கு நிறைய 'படுக்கை மற்றும் காலையுணவு'(B&B) வசதியுள்ள இடங்கள் குறைந்த விலைக்கே கிடைக்கின்றன. லண்டனின் மையப்பகுதியில் இருக்கும் பெரிய ரயில் நிலையம் 'விக்டோரியா ரயில் நிலையம்'. இதற்கு அருகில் B&B வசதியுள்ள இடங்கள் நிறைய இருக்கின்றன. முன்னரே reserve செய்திருக்காவிட்டாலும் விக்டோரியா ரயில் நிலையத்திற்கு வெளியே சுற்றுலா மையத்திற்கு அருகில் உள்ள counter -களில் உடனே book பண்ணிக்கொள்ளலாம். தோராயமாக ஒருவருக்கு ஒருநாளைக்கு 25 பவுண்டுகள் ஆகும். செலவுக்கென்று ஒரு நாளைக்கு குறைந்தது 75 பவுண்டுகள் என்று வைத்துக்கொள்வது நல்லது. இதில் உணவு, போக்குவரத்து, நுழைவுக்கட்டணங்கள் எல்லாம் அடங்கும்.

லண்டன் நகரத்தில் பாதாள ரயில் போக்குவரத்து போக்குவரத்து மிகவும் பிரபலமானது. 'Tube' என்று இதை சொல்லுவார்கள். இது லண்டன் நகரின் பெரும்பாலான எல்லா இடங்களையும் இணைக்கிறது. எளிதாக புரிந்து கொள்வதற்காக பல்வேறு வர்ணங்களில் ரயில் போக்குவரத்து பாதைகளை குறித்து வைத்திருக்கிறார்கள். புதிதாக வருபவர்கள் கூட எளிதில் பார்த்து புரிந்துகொள்ளக்கூடிய அளவுக்கு நன்றாக எளிமைப்படுத்தியிருக்கிறார்கள். கீழே உள்ள படத்தைப்பாருங்களேன் உங்களுக்கே புரியும்.


நகரில் பெரும்பாலும் எல்லா ரயில் நிலையங்களிலும் சுற்றுலா உதவி மையங்கள் இருக்கும். சுற்றிப்பார்க்க செல்லும்போது, அந்த இடம் எந்த ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கிறது என்று குறித்துவைத்துக்கொள்வது நல்லது. அதே போல் அந்த நாளில் எந்தெந்த இடங்கள் பார்க்கப்போகிறோம் என்பதை முன்பே தயார் செய்வது ரயில் பிரயாணத்தில் அதிக நேரத்தை வீணடிக்காமல் இருப்பதை தடுக்கும்.

முதன் முதலாக யாருடன் உதவியுடன் இல்லாமல் செல்பவர்கள் 'The Big Bus' போன்ற திறந்த மேற்புறத்துடன் நேரடி வர்ணனையுடன் கூடிய பேருந்துகளில் பயணம் செய்வது வித்தியாசமான ஒரு அனுபவமாக இருக்கும். லண்டனில் முக்கியமான எல்லா இடங்கள் வழியாகவும் போய்
வருமாறு ஒரு சுற்றுப்பாதை வகுத்திருப்பார்கள். ஒருமுறை அனுமதிச்சீட்டு வாங்கினால் அது 24 மணி நேரத்துக்குள் எந்த இடத்திலும் இறங்கி ஏறிக்கொள்ளலாம். 15 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு பேருந்து வந்து போய்க்கொண்டு இருக்கும். இத்துடன் இலவசமாக ஒரு படகு சவாரிக்கான
அனுமதிச்சீட்டும் தருவார்கள்.

பாஸ்போர்ட் போன்றவற்றை பத்திரமாக வைத்துக்கொள்வது நல்லது. பயப்படும் படியாக இல்லாவிட்டாலும் சில இடங்களில் திருட்டு பயம் உண்டு. பொதுவாகவே எங்கும் வழியில் காவலர்கள் நிறுத்தி பாஸ்போர்டை காட்ட சொல்லுவதில்லை. செலவுக்கு Travellers cheque -ஆக பணத்தை மாற்றி எடுத்துக்கொண்டு வருவது நல்லது. முழுவதுமாக பவுண்டுக்கு மாற்றிவிடாமல் அன்றைய செலவுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு மட்டும் மாற்றி எடுத்துக்கொண்டு வருவது நல்லது.

அடுத்த பதிவுகளில் லண்டனில் எந்தெந்த இடங்கள் முக்கியமாக பார்க்க வேண்டியவை என்பதை பார்க்கலாம். ...

Friday, October 21, 2005

பெங்களூர் மலர்க் கண்காட்சி...

இவை பெங்களூர் லால் பார்க்கில் வருடா வருடம் நடக்கும் மலர்க் கண்காட்சியின் போது எடுக்கப்பட்டவை.

















Thursday, October 20, 2005

தேசப்பற்று...

சில பதிவுகளில் சிலர் 'அயல்நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்தியாவை குறை கூற எந்த அருகதையும் இல்லை' என்பது போல் எழுதுவதை படிக்க வருத்தமாக இருக்கிறது.

இந்தியாவில் வசிப்பதால் மட்டுமே அல்லது இந்தியாவை புகழ்ந்து பேசுவதால் மட்டுமே ஒருவர் தேசப்பற்று மிக்க இந்தியர் ஆகிவிடமுடியாது. தேசப்பற்று என்பது உணர்வு பூர்வமான ஒன்று. அது எங்கிருந்தாலும் எங்கு வசித்தாலும் மாறாத ஒன்று. குடும்பத்தில் இருக்கும் தவறுகளை குடும்பத்தவரிடம் சுட்டிக்காட்டுவதில் எந்த தவறும் இல்லை. அதையே போய் பக்கத்துவீட்டவரிடம் நக்கலாக கூறினால் அதை தவறு என்று ஒத்துக்கொள்கிறேன். எனக்குத்தெரிந்து யாரும் அப்படி செய்வதில்லை.

இந்தியா வாழ்க, இந்தியா வாழ்க என்று கூக்குரலிடுவதால் மட்டுமே நமது நாடு முன்னேறிவிடாது. இந்தியாவின் முன்னேற்றத்துக்கு தேவையானது நல்ல ஒரு direction... அந்த திசையை நோக்கி அனைவரின் ஒட்டுமொத்த கடின உழைப்புப் பயணம். அதற்கு வளர்ந்த, வளரும் பக்கத்து நாட்டவர்களுடன் நம்மை சரி பார்த்துக்கொள்ள வேண்டிய தேவை கட்டாயம் இருக்கிறது. உலமயமாக்கப்பட்ட இந்த சூழ்நிலையில் அங்கிருக்கும் சில நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது.

ஒரு நாட்டின் வளர்ச்சி எங்கிருந்து தொடங்குகிறது என்றால் அது அதன் குறைகளை உணரத்தொடங்குவதிலிருந்தே. நாம் எங்கிருக்கிறோம் என்று தெரிந்தால் தான் அங்கிருந்து அடுத்த நிலையை அடைய முடியும். அதை வெவ்வேறு நாடுகளிலில் வசிக்கும் இந்தியர்கள் நல்ல கெட்ட விஷயங்களை, அவரவரது கண்ணோட்டத்தை ஆராய்ந்து அதை நமக்குள் பொதுவான அமைப்பான வலைப்பதிவில் வெளியிடுவது ஆக்கபூர்வமான ஒன்றே தவிர வேறெதுவுமில்லை.

தயவு செய்து நாட்டுப்பற்றுக்கு இது போன்ற அளவு கோல்களை வைக்காதீர்கள். அடுத்தவரின் தேசப்பற்றை தயவுசெய்து சந்தேகிக்காதீர்கள். தவறு செய்யும் தனிமனிதரை தயவுசெய்து கண்ணியமாக கண்டியுங்கள். தனி மனிதரின் கருத்துக்களை பொதுமைப்படுத்தி எல்லோரும் இப்படித்தான் என்ற முடிவுக்கு வரவேண்டாம்.

Wednesday, October 19, 2005

அருமை x அருகாமை

பக்கத்தில் இருந்தால் பலவற்றின் அருமை தெரிவதில்லை. யோசித்துப்பார்த்தால், மதுரையில் பதினைந்து வருடங்களுக்கு மேல் வசித்திருக்கிறோம்...சொன்னால் நம்ப மாட்டீர்கள் இது வரைக்கும் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் போனதில்லை. நேற்று என் அலுவலகத்தில் புதிதாக சேர்ந்த நண்பர் இந்தியாவில் எந்த இடம்? என்றபோது மதுரை என்றேன். கேட்டவுடன் அவர் முகத்தில் ஒரு பிரகாசம்.. 'மினாக்ஷி டெம்ப்பிள்' என்று மகிழ்ச்சி பொங்கக் கூறி அவர் அங்கு போயிருந்தபோது ஏற்பட்ட அனுபவங்களை விவரிக்க தொடங்கினார்... அப்போது தான் நெஞ்சில் சுருக் என்று உறைத்தது.

சொந்த ஊருக்கு அருகில் இருக்கும் 'சித்தன்ன வாசல்' குகை ஓவியங்களின் அருமையும், பள்ளியில் அவை பற்றி படித்திருந்தாலும் போகவேண்டுமென்று தோன்றவில்லை. கூகிள் எர்த்தில் பார்த்தவுடன் தான் இராமேஸ்வரம் இருக்கும் அழகு பொங்கும் இடமும் அதன் அருமையும்
தெரியவருகிறது. இத்தனைக்கும் என் சொந்த ஊரிலிருந்து இரண்டு மணி நேர பிரயாண தூரத்தில்.

ஆனால் கல்லூரி நாட்களில் மட்டும் தஞ்சை பெரிய கோயிலுக்கு தவறாமல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆஜராகிவிடுவது உண்டு.. ஆனால் அது வேறொரு காரணத்துக்காக..... வேறொன்றுமில்லை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பெரிய கோயிலில் இசை அல்லது நாட்டிய நிகழ்ச்சி நடப்பதை பார்ப்பதற்கு... :-)

அதே போல் தான் அம்மாவும், அம்மாவுடன் கூடவே இருக்கும் வரை அவரின் அருமை தெரியவில்லை. முதன் முதலாக கல்லூரிப்படிப்புக்காக வெளியே வந்தவுடன் தான் அவருடைய அருமை புரிந்தது. ஒரு வயதில் எப்போது பார்த்தாலும் எரிந்து விழுவது.. எதற்கெடுத்தாலும் ஒரு கோபம் என்று அம்மா எது சொன்னாலும் எதிர்த்துப்பேசிக்கொண்டிருந்தது எவ்வளவு தப்பென்று விட்டு விட்டு தூரத்தில் இருக்கும் போது தான் புரிந்தது. அதுவே அவர் பக்கத்தில் எப்போதும் இருக்கும் சூழ்நிலையில் இருந்திருந்தால் இந்த உணர்தல் சாத்தியப்பட்டிருக்குமா என்று தெரியவில்லை.

பக்கத்திலிருக்கும்போதெல்லாம் தினமும் ஒரு முறையாவது சண்டை போட்டுக்கொள்ளும் மனைவியின் அருமையும் அவரது அண்ணனின் திருமணத்திற்காக தனியாக ஊருக்கு போயிருக்கும்போது தான் தெரிந்தது. அக்கா, தம்பி, உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரின் அருமையும் அப்படித்தான்.

அதேபோல் தான் அயல்நாட்டிற்கு வந்தபின் தான் சொந்த நாட்டின் அருமை புரிகிறது. சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா என்று சித்தப்பா ராமராஜன் போல் பாடத்தோன்றுகிறது. இந்தியாவில் இருக்கும் வரை கார்கில் போர், பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட்டு, சுதந்திர, குடியரசு தினங்களின் போது மட்டும் பெரும்பாலும் பொங்கியெழும் தேசப்பற்று இங்கு அயல்நாட்டில் தினமும் ஒருமுறையாவது இந்தியன் என்று அறியப்படுவதால் எப்போதும் நெஞ்சில் நிறைந்திருக்கிறது.

இப்பவாவது அருமை தெரிந்ததே.. அதுவரைக்கும் நல்லது என்கிறீர்களா?... அதுவும் சரிதான். இந்த முறை ஊருக்கு போகும்போது பார்க்கவேண்டிய இடங்கள், கோயில்கள் மற்றும் அன்பு செய்ய வேண்டிய சொந்தங்கள் என்று போட்ட பட்டியல் கொஞ்சம் நீளமாகவே இருக்கிறது.

Tuesday, October 18, 2005

மனதுடன் ஒரு போராட்டம்...

மனது ஏன் இப்படி படபடக்கிறது. ஒரு செயலை செய்யும்போது அதில் கவனமில்லாமல் வேறு எதற்கோ ஏன் சிந்தனை செல்கிறது. ஒருவேலையை செய்யலாம் என்னும்போது மனதின் மறுபுறம் வேறு வேலையை செய்ய ஆசைப்படுகிறதே !!. அப்போது மனம் என்பது ஒன்றுதானா அல்லது ஒன்றுக்கு மேலா? எப்போதும் ஒரு பரபரப்பு. எதையோ பிடிக்க ஓடுவது போல் ஒரு நிலையின்மை. அப்போது அந்த கணத்தை அனுபவிக்க முடியாமல் தவிப்பு.

எது வேண்டுமென்று தெரியவில்லை. எதுமுக்கியம் என்று தெரியவில்லை. எது நல்லதென்று புத்திக்கு ஒருவேளை தெரிந்தாலும் அதை செயல்படுத்த முயலும் போது ஏதோ ஒன்று வந்து அதை செய்வதை தடுக்கிறது... தடுக்கும் அது எதுவென்று உற்று நோக்கினால் அதுவும் நம் மனதிலிருந்து தான் புறப்படுகிறது என்று புலப்படுகிறது. இப்போது இவை இரண்டையும் உற்று நோக்கும் இந்த சிந்தனை எதுவென்ற கேள்வி வருகிறது. கேள்விகள் மேல் கேள்வி கேட்டு, கிடைக்கும் பதிலின் மீதும் கேள்வி கேட்டு முடிவில்லாத தொடர் சிந்தனையில் செய்ய வேண்டிய வேலையை விட்டு எங்கோ போய் தூரத்தில் நிற்கிறது மனம். சுதாரித்துக்கொண்டு மீண்டு வருவதற்குள் எந்த இடத்தில் விட்டோம் என்பது மறந்து போய், திருவிழாவில் தொலைந்து போன குழந்தைபோல் முழிக்கிறது.

மனதின் ஒருபுறத்துடன் மறுபுறம் போராடி போராடி பின்பு அவை இரண்டும் எதிரிகள் இல்லை என்ற தெளிவு வந்து சரி ஒன்றை ஒன்று புரிந்து கொள்ள வைக்க முயற்சிக்கலாம் என்ற ஆசை வருகிறது. அதற்கு ஏதுவாக தளம் ஏற்படுத்திக்கொடுப்பது அவசியமாகிறது.

அமைதியான சூழலில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு மனதின் சிந்தனையோட்டத்தை, அது போகும் திசையை தனித்து நின்று உற்று நோக்கினால் மனம் ஓடி ஓடி களைத்துப்போய் எங்கோ போய் நின்று விடுகிறது...அப்போது கிடைக்கும் அமைதி அப்போது கிடைக்கும் தெளிவு இதுவரை அனுபவித்திராத மற்றும் வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒன்றாக இருக்கிறது. அப்போது கண்களை திறந்து உலகத்தை திறந்து பார்த்தால் அந்த அனுபவமே புதிதாக இருக்கிறது. அந்த அமைதி போருக்குப்பின் அமைதி என்பார்களே அது போல் மனப்போருக்கு பின் ஏற்படும் அமைதி.

இந்த அமைதியை யாரேனும் எப்போதேனும் உணர்ந்திருக்கிறீர்களா?

Monday, October 17, 2005

சிறுவயது விளையாட்டுக்கள்.

இப்போதுள்ள சிறுவர்களுக்கு விளையாடக்கிடைக்கும் X-BOX, Playstation, GameBoy இவற்றையெல்லாம் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. அந்த நவீன விளையாட்டு சாதனங்களை இந்தத் தலைமுறை சிறுவர்கள் கையாளும் லாவகம் பிரமிக்க வைக்கிறது. அதே போல் நமது சிறுவயதில் நமக்கு நமது சிறு வயதில் என்ன விளையாடக்கிடைத்தது என்றும் ஆதங்கப்படவும் வைக்கிறது.

கொஞ்சம் நினைவுகளை பின்னோக்கி சுழல விட்டுப்பார்த்தால் எனக்கு விவரம் தெரிந்து விளையாடிய விளையாட்டுகள்...

முதலில் நினைவுக்கு வருவது ஒளிந்து பிடித்து விளையாடுதல். இதற்கு 'சாட் பூட் த்ரீ' என்று சொல்லி ஓவ்வொருவராக விலக்கிவிட்டு கடைசியில் யார் இருக்கிறார்களோ அவர்கள் ஒன்றிலிருந்து பத்துவரை கண்ணை மூடிக்கொண்டு எண்ணவேண்டும். அதற்குள் மற்றவர்கள் ஒளிந்து கொள்ளவேண்டும். பின்பு ஒளிந்து கொண்டவர்களை ஒவ்வொருவராக கண்டு பிடிக்க வேண்டும். ஒளிந்திருப்பவரை ஒவ்வொருவராக கண்டு பிடித்தவுடன் 'ஒன்னீஸ்' 'ரெண்டீஸ்' :-) என்று சொல்லுவார்கள். இந்த விளையாட்டின் பெயரே ஒன்னீஸ் ரெண்டீஸ் என்று சொல்லுவது உண்டு. அனைவரும் கண்டு பிடிக்கப்பட்ட பின் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டவர் பின்பு தொடர வேண்டும். இப்படி போய்கொண்டே இருக்கும்

ஆண்களுக்கு பம்பர விளையாட்டு மிகவும் பிரசித்தமானது, 1,2,3 சொல்லிவிட்டு எல்லோரும் ஒரே சமயத்தில் பம்பரத்தை சுழலவிட்டுவிட்டு சாட்டையால் சுற்றி கையில் எடுக்க வேண்டும். யார் கடைசில் எடுக்கிறார்களோ அவர்களது பம்பரத்தை மண் தரையில் ஒரு வட்டம் போட்டுவிட்டு அதன் உள்ளே இடுவார்கள். அப்புறம் ஒவ்வொருவராக பம்பரத்தை வேகமாக சுழற்றி முதலில் அந்த வட்டத்துக்குள் குத்துமாறு சுழலவிடவேண்டும். வட்டத்துக்குள் குத்தாவிட்டால் அவரது பம்பரமும் வட்டத்துக்குள் வைக்கப்படும். இது ஒரு சுவாரசியமான ஆட்டம். ஆட்டத்தின் முடிவில் தோற்பவரின் பம்பரத்தின் மேல் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் ஒரு 'ஆக்கர்'(பம்பரத்தின் மேல் ஆணியை வைத்து புள்ளி விழுமாறு ஓங்கி அடிப்பார்கள்) வைப்பார்கள். சில சமயங்களில் பம்பரம் உடைவது கூட உண்டு. சிலசமயம் பெண்களை கவர, பம்பரத்தை சுழற்றி தரையில் படாமலே கையில் எடுப்பதுவும் உண்டு.

கோலி விளையாட்டு பல விதங்களில் விளையாடப்படும். சுவற்றின் ஓரத்தில் ஒரு சதுரமாக ஒரு கோடு போட்டுவிட்டு அதற்குள் சில கோலிகளை உருட்டுவார்கள். அதற்குப்பிறகு எதிராளி சொல்லும் கோலியை எறிந்து அடிக்க வேண்டும். இதற்கு சிகரெட் அட்டை, கோலி குண்டு இவற்றை பணயமாக வைத்து ஆடுவது உண்டு. கோலிகுண்டு சிலசமயம் சிலர் பணம் வைத்து ஆடுவதால், வீட்டார்கள் அதை பெரும்பாலும் விளையாட அனுமதிப்பதில்லை.

கிட்டிப்புல்(கில்லி) எங்கள் பகுதிகளில் மிகவும் பிரபலமான ஆட்டம். ஆனால் பல இடங்களில் இதை விளையாடவிட மாட்டார்கள். எனக்கு தெரிந்து நிறைய பேருக்கு கில்லி விளையாட்டால் காயம் ஏற்பட்டிருக்கிறது. ஆட்டம் மிகவும் சுவாரசியமானது. தரையில் நீளவாக்கில் தோண்டிவிட்டு கிட்டிப்புல்லை அதற்கு குறுக்கில் வைக்க வேண்டும், பிறகு கையில் இருக்கும் கோலால் , கிட்டிப்புல்லை வேகமாக அழுத்தம் கொடுத்து நெம்பித் தள்ள வேண்டும். எதிராளிகள் அந்தப்புறம் நின்று கொண்டு இருப்பார்கள். அவர்கள் இதை கீழே விழாமல் பிடித்துவிட்டால் நீங்கள் அவுட்.. பின்பு அவர்கள் முறை. பிடிக்காமல் தூரத்தில் போய் விழுந்தால், நீங்கள் கோலை குறுக்காக வைக்கவேண்டும் .பின்பு அவர்கள் கிட்டிபுல்லை தூக்கி குறி பார்த்து எறிந்து அது கோலில் பட்டால் நீங்கள் அவுட். அவர்கள் எறியும் போது அது கோலில் படாமல் தூரத்தில் போய் விழுந்தால் நீங்கள் ஆட்டத்தை தொடரலாம்.

ஆட்டம் எப்படியென்றால், நீங்கள் கிட்டிப்புல்லின் சீவியிருக்கும் ஒரு முனையில் அடிக்க வேண்டும், அது எம்பி வரும்போது அதை கோலால் எத்தனை முறை தட்ட முடியுமோ அவ்வளவு புள்ளிகள். அப்படி தட்டிக்கொண்டே குழியிலிருந்து எவ்வளவு தூரம் கொண்டு செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் கொண்டு செல்ல வேண்டும். ஒரு முறை கூட தட்ட முடியாவிட்டால் அங்கிருந்து குழி இருக்கும் தூரத்தை கையிலிருக்கும் கோலால் அளக்க வேண்டும் எவ்வளவு தூரம் இருக்கிறதோ அவ்வளவு புள்ளிகள். இப்படியே நீங்கள் அவுட் ஆகும் வரை ஆட்டம் தொடரும். ஒரு தெருவில் ஆடும் ஆட்டம் அப்படியே பக்கத்து தெருவிற்கும் போவது உண்டு.

பள்ளியில் இடைவேளைகளில், சோளத்தட்டையால் எறி பந்து விளையாடுவது உண்டு. வகுப்பறையில் போரடித்தால் ரஃப் நோட்டுப்புத்தகத்தில் கட்டம் போட்டு விளையாடுதல் ரொம்ப பிரபலம். அதே போல் நீளமான குச்சியை வைத்துக்கொண்டே விளையாடும் கரண்ட் ஷாக், புளியங்கொட்டையை ஒரு வட்டத்திற்குள் கொட்டிவிட்டு அதை தட்டையான கல்லால் செதுக்கி வெளியே கொண்டு வந்து விளையாடும் 'செதுக்கு சில்' ரொம்ப பிரபலம். அதே போல் ஊருக்கு ஒதுக்குப்புறத்திற்கு சென்று மாஞ்சா தடவி பட்டம் விடுதல் ரொம்ப பிரபலம்.

பெண்களெல்லாம் கண்கட்டு விளையாட்டு, பரமபதம், நொண்டி , சொட்டாங்கல்( இது மிகவும் பிரபலமான விளையாட்டு), பல்லாங்குழி இவையெல்லாம் விளையாடுவது உண்டு. நல்ல மணல் விளையாடக்கிடைத்தால் மணலை நீளவாக்கில் குவித்துவிட்டு எதிரெதிராக உட்கார்ந்து கொண்டு சிறு கல்லை அதற்குள் ஒளித்து வைத்து எதிரில் இருப்பவர் அது எங்கிருக்கிறது என்பதி அனுமானித்து அதன் மேல் இருகைகளை வைத்து மூடவேண்டும். சரியாக கணித்தால் பின்பு அடுத்தவர் முறை. இந்த விளையாட்டின் பெயர் மறந்துவிட்டது.

அதற்குப்பிறகு தூர்தர்ஷன் புண்ணியத்தில் கிரிக்கெட் பிரபலமான பின்பு பெருப்பாலானோர் அதற்கு தாவி விட்டனர். அந்தந்த தெருவில் உள்ள சிறுவர்கள் அனைவரும் இனைந்து ஒரு டீம் ஆரம்பித்து எல்லோரும் பணம் போட்டு கிரிக்கெட் விளையாட்டுக்கு தேவையான் பொருள்கள் வாங்கி பக்கத்து தெருவில் இருக்கும் டீமுடன் போட்டிக்கு போவது உண்டு. சிலசமயம் பெரிய டோர்னமென்ட் எல்லாம் நடத்துவது உண்டு. முதல் பரிசு இரண்டாம் பரிசு எல்லாம் அந்த வட்டாரத்தில் இருக்கும் எம்.எல்.ஏ அல்லது கவுன்சிலர் கொடுப்பார். அதற்கு கைமாறாக சுவரொட்டி அடித்து பரிசு உபயம் என்று அவர்கள் பெயரை வெளியிடுவது உண்டு. கிரிக்கெட் விளையாடும்போது எவ்வளவோ கண்ணாடிகளை உடைத்திருக்கிறோம். கார்க் பந்தில் கால் தடுப்பு கூட இல்லாமல் வேகப்பந்து வீச்சை தைரியமாக எதிர்கொள்ளும் தைரியத்தை இப்போது நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

அப்போதெல்லாம் மதுரை மருத்துவக்கல்லூரி மைதானத்துக்கு விடுமுறை நாளில் போகும்போது குறுக்கும் நெறுக்குமாக எத்தனையோ குழுக்கள் கிரிக்கெட் ஆடிக்கொண்டு இருக்கும். கிரிக்கெட் மைதானத்துக்கு அவ்வளவு பஞ்சம். மைதானங்களின் பஞ்சத்தால் குறுகலான தெருக்களில் ரப்பர்
பந்துகளில் ஒன் பிட்ச் கிரிக்கெட் ஆடுவது பிரபலமாகிவிட்டது. கிரிக்கெட் பிரபலனானதால் அழிந்து போன சிறுவயது விளையாட்டுக்கள் எவ்வளவோ.

மேலே சொல்லாமல் விடுபட்டுப்போன எவ்வளவோ விளையாட்டுக்கள் இருக்கின்றன. இப்போது இருக்கும் சிறுவர்களுக்கு இவைபற்றியெல்லாம் எந்த அளவுக்கு தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை. கிராமங்களில் இவை இன்னும் உயிருடன் இருக்கின்றன என்று நம்புகிறேன். ஆனால் ஒன்று மட்டும் உண்மை இதை பற்றி எழுதும்போதே மனதுக்குள் மெல்லிதான ஒரு ஆனந்தம் பரவுவதை உணர முடிகிறது...

ஜனாதிபதியிடமிருந்து நன்றிக் கடிதம்...

காசி அவர்கள் அவரது பதிவில் நமது ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்திற்கு அவர் பதில் அனுப்பவில்லை என்பதை சுட்டிக்காட்டியிருந்தார். எனக்கும் அதே அனுபவம் தான் இருந்தது.

கடந்த வாரம் நமது தமிழ் வலைப்பதிவர் சார்பாக ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தேன் இப்போது மின்னஞ்சலை திறந்து பார்த்தால் ஜனாதிபதியிடமிருந்து நன்றி தெரிவித்து ஒரு மின்னஞ்சல். ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது. இதோ அதன் பிரதி உங்களுக்காக.

நட்சத்திரமா !!! நானா ???

உண்மையிலேயே பயமாகத்தான் இருக்கிறது. திடீரென்று மதி அவர்கள் அக்டோபர் மாதம் ஏதாவது ஒரு வாரத்திற்கு நட்சத்திரமாக இருக்க முடியுமா என்று கேட்டார்கள். ஏதோ ஒரு தைரியத்தில் ஒப்புக்கொண்டு விட்டேன். தருமி, டொண்டு போன்ற பழம் தின்று கொட்டை போட்ட பெரியவர்கள் நட்சத்திரமாக இருந்த வாரங்களுக்கு அடுத்தவாரம் என்று நினைக்கும்போது கொஞ்சம் கை நடுங்குகிறது.

பள்ளிப்படிப்பு படிக்கும்போதே எழுத்தில் ஆர்வம் இருந்ததாக ஞாபகம். சிறுவயதில் 'பாரதி' என்ற கையெழுத்துப்பத்திரிக்கை நடத்தினேன். வெறும் மூன்று பிரதிகள் மட்டும் வெளியிட்டு நிறுத்திவிட்டேன் (குமுதம் ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகளின் போட்டியால்.. :-) கல்லூரி நாட்களில் அவ்வப்போது டயரியில் கிறுக்குவது உண்டு. அவ்வளவுதான் எழுத்துக்கும் எனக்கும் உள்ள தொடர்பு. ஆனால் நிறைய படிப்பது உண்டு. எழுத்தாளர் பாலகுமாரனின் பரம விசிறி. அவருடைய அனைத்து புத்தகங்களையும் படித்திருக்கிறேன். கடந்த ஒருவருடமாக அலுவலகத்தில் வேலை நெருக்கடி அவ்வளவாக இல்லாததால் எதுடா படிக்கக்கிடைக்கும் என்று ஏங்கியது உண்டு. கூகிள்-->தமிழோவியம்--> கிரிக்கெட்-->பத்ரியின் வலைப்பதிவு-->தமிழ்மணம் என்று தமிழ்மணத்தை முதன் முதலில் நுகர நேர்ந்தது. முதல் சில மாதங்கள் படித்தல் மற்றும் பிரதிபலித்தல் என்றே இருந்துவிட்டேன். ஒருநாள் தைரியம் வந்து சொந்தமாக ஒரு வலைப்பதிவு ஆரம்பித்து எழுத ஆரம்பித்தேன். எழுத ஆரம்பித்தவுடன் அதற்கு கிடைத்த வரவேற்பு மேலும் மேலும் உற்சாகத்தை கொடுத்தது.

எழுத ஆரம்பித்தவுடன் மறக்கமுடியாதது..

ஒரு நாள் எழுத்தாளர் மாலனிடமிருந்து ஒரு மின்னஞ்சல். நான் எழுதிய லண்டனில் குண்டுவெடிப்பு பற்றிய கட்டுரையை 'திசைகளில்' வெளியிடலாமா? என்று..... தலை கால் புரியவில்லை. அட நமது எழுத்துக்கும் அங்கீகாரம் கிடைக்கிறதே என்று ஒரே மகிழ்ச்சி. முதன் முதலில் அதை திசைகளில் பார்த்தபோது அடைந்த மகிழ்ச்சியை விவரிக்க இயலாது. நண்பர்கள், உறவினர்கள் எல்லாருக்கும் சுட்டியை அனுப்பினேன். அப்போது தான் யாரோ ஒரு பெரியவர் 'நாம் எல்லாம் அங்கீகாரத்துக்கு ஏங்கும் பிச்சைக்காரர்கள்' என்று சொன்னதை உணர முடிந்தது.

சும்மாவே நான் தமிழ்மணம்-holic.. அலுவலகத்தில் எப்போதெல்லாம் ஓய்வு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் தமிழ்மணத்திற்கு வந்து தலையை காட்டி விட்டுபோவது உண்டு. இந்தவாரம் தொடர்ந்து தினமும் எழுத வேண்டும் இல்லையா? அலுவலகத்தில் வேலை செய்தாற் போல் தான்... இது வரை இந்தவாரம் முழுவதும் என்ன எழுதுவது என்று திட்டமிடவில்லை.
முடிந்தவரை எழுதுகிறேன். தயவுசெய்து அவ்வப்போது வந்து எட்டிப்பார்த்து முடிந்தால் முதுகில் தட்டிவிட்டோ அல்லது தலையில் கொட்டிவிட்டோ போங்கள்.

Friday, October 14, 2005

ஜனாதிபதிக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

நாளை (15/10/2005) பிறந்தநாள் காணும் நமது ஜனாதிபதிக்கு நமது வலைப்பதிவு நண்பர்கள் சார்பாக பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.



இலட்சிய சிகரம்

நான் ஏறிக்கொண்டே இருக்கிறேன்,
எங்கு இருக்கிறது இலட்சிய சிகரம், என் இறைவா?

நான் தோண்டிக்கொண்டே இருக்கிறேன்,
எங்கு இருக்கிறது அறிவுப் புதையல், என் இறைவா?

நான் பெருங்கடலில் நீந்திக் கொண்டே இருக்கிறேன்,
எங்கு இருக்கிறது அமைதித் தீவு, என் இறைவா?

இறைவா, நூறு கோடி மக்கள்
இலட்சிய சிகரத்தையும், அறிவுப் புதையலையும்,
இன்ப அமைதியையும், உழைத்தடைய அருள்வாயாக !!

ஏ.பி.ஜே. அப்துல் கலாம்,
மாண்புமிகு ஜனாதிபதி, இந்தியா
_____________________________


சிகரத்தை அடைந்த பின்பும் தேடலைத் தொடரும் நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.

Tuesday, October 11, 2005

ஒரு தேசியின் புலம்பல்கள்...

வெளிநாட்டிற்கு சம்பாதிக்க வருபவர்கள் பற்றி பெரும்பாலோர் நினைப்பது:

1) வெளிநாட்டில் இருக்கும் அனைவரும் ராஜ வாழ்க்கை வாழுகின்றனர்.
2) அவனுக்கென்ன கார், வீடு என்று வசதியாக இருக்கிறான்.
3) வங்கிக்கணக்கில் எக்கச்சக்கமான பணம் வைத்திருப்பான்.
4) எப்போது பணம் கேட்டாலும் அவனால் பணம் அனுப்ப முடியும்.
5) வெளிநாட்டில் இருந்து தொலைபேசியில் இந்தியாவிற்கு பேசுவது இலவசம்.
6) நம்மையெல்லாம் மறந்து விட்டான். பணத்திமிர் அது தான்(சிலவாரங்கள் தொலைபேசியில் பேசாவிட்டால்..)
7) நாம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம், உதவி செய்வதற்கு வெளிநாட்டில் இருக்கின்றானே அவன்.
8) பக்கத்து வீட்டவரின் மகன் எவ்வளவு சம்பாதிக்கிறான். இவன் தான் எதுவுமே செய்வதில்லை.
9) பவுண்டு டாலர் மதிப்பு தான் ஏறிக்கொண்டிருக்கிறதே அப்புறம் என்ன?

ஆனால் நிஜம் என்ன?

1) சம்பளத்தில் பெரும்பகுதி வரி கட்டவே போய் விடுகிறது.
2) மற்றொரு பெரும்பகுதி வீட்டு லோன்/வாடகைக்கு போய் விடுகிறது.
3) மற்றும் கவுன்சில் வரி.
4) சொந்தவாகனம் வைத்திருந்தால், இன்சூரன்ஸ், ரோடு வரி, வாகன வரி என்று ஒரு பகுதி போய்விடும். சொந்த வாகனம் இல்லாவிட்டால் ரயில் கட்டணம் பயங்கர அதிகம்.
5) அது ஏன் வீட்டில் தொலைக்காட்சி வைத்திருந்தால் அதற்குக்கூட வரி.
6) அது போல நேசனல் இன்சூரன்ஸ் என்ற பெயரில் பெரும்பகுதி போய்விடும்.
7) அது போக கவுன்சில் டாக்ஸ், காஸ், எலக்ட்ரிசிடி, இன்டெர்னெட் என்று ஒருவருடைய சம்பளம் முழுவதும் போய்விடுகிறது.
8) இதுபோக கிரெடிட் கார்டுகள் வேறு.
9) வருடத்திற்கு ஒருமுறை இந்தியாவிற்கு போகவேண்டிய செலவு வேறு.
10) வீட்டில் இருவரும் வேலைசெய்தே ஆக வேண்டிய கட்டாயம்.
11) வங்கிகள் சும்மா இருப்பதில்லை, ஏதாவது ஒரு லோன் தானாகவே வந்து கொடுத்து அதைவேறு கட்டவேண்டும்.

வரவு எவ்வளவு இருந்தாலும் அதிவிட செலவும் அதிகமாகத்தான் இருக்கிறது. இதெல்லாம் யாருக்கு புரியப்போகிறது? :-(((

Monday, October 03, 2005

24 MBpS அகலப்பாட்டை இணைப்பு

போன மாதம் தான் இது பற்றி தெரிய வந்தது. 'பி தேர்' என்னும் நிறுவனம் 24 MBps ப்ராட்பேண்ட் இணைப்பை வெறும் 24 பவுண்டுகளுக்கு கொடுக்கிறார்கள். எந்தவிதமான இறக்கல் கட்டுப்பாடுகளுமில்லாத இணைப்பு இது.

இப்போது இருக்கும் 1 MB இணைப்பே படு வேகமாக இருக்கிறது. இருந்தாலும் இப்போது கொடுக்கும் அதே பணத்திற்கு இதைவிட 24 மடங்கு அதி வேக இணைப்பு கிடைக்கும்போது ஏன் விடவேண்டும். உடனடியாக இணைப்புக்கு விண்ணப்பித்து விட்டேன்.

இணைப்பு கிடைத்தவுடன் அந்த அனுபவத்தைப்பற்றி எழுதுகிறேன்.